மதுரை ஆதின மடாதிபதி அறிவிப்பை திரும்பப் பெற்றார் நித்யானந்தா... ஹைகோர்ட் எச்சரிக்கையால் பல்டி!
மதுரை ஆதின 293வது மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதை நித்யானந்தா திரும்பப்பெற்றுள்ளார்.
சென்னை : மதுரை ஆதின 293வது மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதை நித்யானந்தா திரும்பப் பெற்றுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து இன்று தாக்கல் செய்த பதில் மனுவில் தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், மடாதிபதியாக தன்னை அறிவித்துக் கொண்டதை திரும்பப் பெறுவதாகவும் நித்யானந்தா தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.
மதுரை ஆதீனத்தின் 292வது ஆதீனமாக அருணகிரிநாதர் இருந்த போது கடந்த 2014ம் ஆண்டு 293வது மடாதிபதியாக நித்யானந்தாவை அறிவித்தார். இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது.
நித்யானந்தா ஆதீனமாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஆதினமாக நித்தியானந்தா செயல்பட தடை விதிக்கப்பட்டது. மேலும் ஆதினத்திற்குள் நுழையவும் நித்யானந்தாவிற்கு தடை போடப்பட்டது.
இந்நிலையில் தடையை நீக்கக் கோரி நித்யானந்தா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அந்த மனுவில் தான் 293வது சந்நிதானம் என்று நித்யானந்தா குறிப்பிட்டிருந்தார், அப்போதே நீதிபதி மகாதேவன் 292வது ஆதினமான அருணகிரிநாதர் உயிருடன் இருக்கும் போது உங்களை எப்படி மடாதிபதியாக அறிவித்துக் கொள்ளலாம் இது தவறு என்று சுட்டிக்காட்டியதோடு பதில் மனுவை மாற்றி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் நித்யானந்தா தரப்பில் திருத்தப்பட்ட பதில் மனு தாக்கல் செய்யப்படாமல் வாய்தா வாங்கிக் கொண்டே இருந்தது. இதனால் கடந்த ஜனவரி 29ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி நித்யானந்தாவிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்தார்.
பதில் மனு தாக்கல் செய்யாவிடில் கைது உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் நித்யானந்தாவின் ஆசிரமங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன என்றும் நீதிபதி காட்டமாக தெரிவித்தார். இந்நிலையில் இன்று நித்யானந்தா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் 293வது ஆதினமாக அறிவித்துக்கொள்வதை திரும்பப் பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் நித்யானந்தா பதில் மனுவில் கூறியுள்ளார். மதுரை ஆதினம் தொடர்பான மற்றொரு வழக்கு கீழ் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் நித்யானந்தா வழக்கை நீதிபதி பிப்ரவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.