ஆக்கிரமிப்பை அகற்றினால் நல்லாவே இருக்க மாட்ட.. சாபம் விட்ட நித்தி கோஷ்டி.. விரட்டி அடித்த போலீஸ்
திருவண்ணாமலையில் உள்ள பவழக்குன்றை ஆக்கிரமிக்க முயன்ற நித்தியானந்தா கோஷ்டியினரை போலீசார் விரட்டி அடித்தனர்.
திருவண்ணாமலை: பவழக்குன்றை ஆக்கிரமிக்க முயன்ற நித்தியானந்தாவின் சீடர்களை போலீசார் விரட்டி அடித்தனர்.
திருவண்ணாமலை பகுதியில் உள்ள பவழக்குன்றை ஆக்கிரமிக்க நித்தியானந்தா கோஷ்டி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. பவழக்குன்றின் மலை உச்சியில் நித்தியானந்தா அண்ணாமலை சாமியின் அருள் பெற்றதாக கூறி அந்த குன்றை ஆக்கிரமிக்க கடந்த 10 ஆண்டுகளாக முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் நித்தியானந்தாவின் சீடர்கள் கொஞ்சம் பேர் இந்தப் பகுதிக்கு சென்று பவழக்குன்றை ஆக்கிரமித்து தங்கியுள்ளனர். இதுகுறித்து சி.பி.எம். கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி ஆக்கிரமிக்கப்பட்ட இடத்துக்கு போலீசாருடன் சென்றார். அங்கு நித்தியானந்தாவின் சீடர்களை வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு அவர்கள் காலி செய்ய முடியாது என்று கூறி சாபம் விட்டனர்.
மேலும், கோட்டாட்சியர் உமா மகேஸ்வரியை மரியாதை இல்லாமல் ஒருமையில் பேசி திட்டியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்களையும் அவர்கள் சாபமிட்டனர். அவர்கள் சாபமிட்டதை பொருட்படுத்தாமல் போலீசார் சிலைகளை அகற்றி நித்தி கோஷ்டியினரை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.