என்.எல்.சி அதிகாரிகளை ஓட ஓட விரட்டிய கிராம மக்கள்... பயந்தோடிய அதிகாரிகள்!
என்.எல்.சி அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்த கடலூர் ஆதனூர் கிராமத்துக்கு வந்த போது, கிராம மகக்ள் அதிகாரிகளை ஓட ஓட விரட்டினர்.
கடலூர்: நிலம் கையகப்படுத்த வந்த என்.எல்.சி அதிகாரிகளை கிராம மகக்ள் ஓட ஓட விரட்டினர். மேலும் அவர்களின் வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனம், தனது நிறுவன விரிவாக்கப் பணிகளுக்காக கடலூர் அருகே உள்ள ஆதனூர் கிராமத்தில் உள்ள நிலங்களை கையகப்படுத்த வந்தனர். அப்போது கிராம மக்கள் அதிகாரிகளை ஊருக்குள் புகுந்து விடாதவாறு விரட்டினர்.
அதில் சிலர் அதிகாரிகள் வந்த வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, நிலத்தைக் கையகப்படுத்த முன்பு ஒருமுறை வந்த போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தோம். ஆனால் அதுகுறித்து எந்த உத்தரவாதமும் அளிக்க அவர்கள் முன்வரவில்லை. ஆனால், எங்கள் நிலம் மட்டும் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். இதனாலேயே நாங்கள் அவர்களை விரட்டினோம் என கூறினர்.
அதிகாரிகள் மீது கற்கள் வீசி விரட்டியடித்தவர்கள் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டது. அதையடுத்து அவர்களில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் தொடர்ந்து ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். அதே போல் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து 23 நாட்களாகப் போராடி வருகின்றனர். இதையெல்லாம் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மத்திய அரசின் மீது வெறுப்பில் உள்ளனர். அந்த வெறுப்பின் எதிரொலியாகவே இவ்வாறு அதிகாரிகள் தாக்கப்படுகின்றனர்.