என் எல் சி ஊழியர்கள் தற்கொலை முயற்சி விவகாரம் : மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்
மாவட்ட ஆட்சியர் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Recommended Video
நெய்வேலி: என் எல் சி ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை முயற்சி செய்ய முயற்சித்த விவகாரத்தில், மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பணிகுறைப்பு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து நெய்வேலி என் எல் சி ஒப்பந்த தொழிலாளர்கள் 25 பேர் நேற்று தற்கொலைக்கு முயற்சி செய்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்கொலைக்கு முயற்சித்த ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரது நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனால் 1ஏ சுரங்கத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் மய கொள்கையின் காரணமாக, நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி தனியார் நிறுவனங்களுக்கு என் எல் சி கொடுத்து வருகிறது. தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் நிலக்கரி எடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
சுரங்கம் தனியார் வசம் சென்றபிறகு, அந்நிறுவனம் தொடர்ந்து ஆள்குறைப்பில் ஈடுபட்டு வருகிறது. இதனால், ஊழியர்களின் வேலை நேரமும், வேலை நாட்களுக்கும் குறைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் பணிமாறுதலும் செய்யப்பட்டு வருகின்றனர்.
இதனைக் கண்டித்து ஊழியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால், இதுவரை ஊழியர்களின் போராட்டத்திற்கு என் எல் சி தரப்பில் இருந்து எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை.
இதனால் நேற்று விஷம் குடிக்கும் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அவர்களில் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் 700 சுரங்கப் பணியாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், இனியும் என்எல்சி நிர்வாகத்திடம் தங்கள் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இல்லை என்றும், மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.