என்எல்சி ஊழியர் துப்பாக்கிச் சூட்டில் பலி.. தொழிலாளர்கள் ஒரு நாள் ஸ்டிரைக்
நெய்வேலி: என்எல்சியில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் நடத்திய கொடூரத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு ஒப்பந்த தொழிலாளர் பலியானதற்குக் கண்டனம் தெரிவித்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஈடுபட்டுள்ளனர்.
நெய்வேலியிலும், என்எல்சி வளாகத்திலும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அசாதாரண சூழல் நிலவி வருகிறது.
முதலாவது பிரிவு மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ஒப்பந்தத் தொழிலாளர் ராஜா. இவர் நேற்று 2வது சுரங்கப் பகுதிக்குள் செல்ல முயன்றபோது அங்கு பணியில் இருந்த மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தடுத்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ராஜா மீது மத்தியப் படை வீரர் 3 ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் தலை சிதறி கோரமான முறையில் உயிரிழந்தார் ராஜா.
இது என்எல்சி தொழிலாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக திரண்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்வீச்சிலும் இறங்கினர். பதிலுக்கு மத்திய தொழிலக படையினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். போலீஸார் விரைந்து வந்து மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தடியடி நடத்தித் தொழிலாளர்களைக் கலைத்தனர்.
இந்த பயங்கர சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் துப்பாக்கியால் சுட்ட வீரரைக் கைது செய்ய வேண்டும், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் இந்த சம்பவத்தைக் கண்டித்து நேற்று இரவு 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.