அதிமுகவுடன் பாஜக கூட்டணி இல்லை: முரளிதரராவ் பேட்டி
சென்னை: தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கக் கூடாது என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல, ஆனால், அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக பாஜகவின் மேலிட பார்வையாளர் முரளிதரராவ் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில்,மக்களவை தேர்தலின் போது தமிழகத்தில் பல்வேறு பொதுக் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டார். அதன் பின்னர் பாஜக எழுச்சி பெற்ற கட்சியாக மாறியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கு பின்னர் தமிழக மக்களிடத்தில் பாஜகவின் செல்வாக்கு வலுப்பெற்றுள்ளது. இதுவரை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.
பாமகவும், தேமுதிகவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து முழுமையாக விலகவில்லை. ஆனால், அவர்கள் விடுக்கும் அறிக்கையை வைத்து அவர்களின் நிலைப்பாட்டை கணிக்க முடியவில்லை. எப்போதுமே எதிர்மறையான கொள்கையுடன் அறிக்கை வெளியிடுகிறார்கள். அதை வைத்து இறுதி முடிவு எடுத்துவிட முடியாது. தொடர்ந்து அவர்களுடன் பேசுவோம்.
எங்கள் கூட்டணியில் இருந்து விலகிய மதிமுக இருக்கும் இடம் தெரியவில்லை. தற்போது இடது சாரிகளுடன் மதிமுக இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை முதல்வர் வேட்பாளர் குறித்து முடிவு இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
முதல்வர் வேட்பாளரை முடிவு செய்வதாக இருந்தால் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் முடிவு செய்வோம். அதை பாஜக மேலிடம்தான் முடிவு செய்யும். .
திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நல்ல நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி என்று பிரச்சாரம் செய்து வருகிறார். நாங்களும் அதைத்தான் சொல்கிறோம். மேலும், ஊழல் வழக்குகளை சந்தித்து வரும் திமுகவினரால் எப்படி ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க முடியும்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையில் வலிமையான கூட்டணி அமையும். நல்ல நிர்வாகம், ஊழல் ஒழிப்பு பற்றி எங்கள் பிரச்சாரம் இருக்கும் என்று முரளிதரராவ் கூறினார்.