பாஜக அல்லாத கூட்டணியில் மமக இடம் பெறும்: ஜவாஹிருல்லா
மதுரை: பாஜக இடம்பெறாத கூட்டணியில் மட்டுமே மனிதநேய மக்கள் கட்சி இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா கூறினார்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை செயற்குழுக் கூட்டம் மதுரையில் இன்று மாலை நடைபெற்றது. கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தலைமை வகித்தார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
மனிதநேய மக்கள் கட்சியில் எந்த வித பிளவுகளும் ஏற்படவில்லை. கட்சியின் வளர்ச்சி சீரான நிலையில் உள்ளது. வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி என்பது பொதுமக்களின் பிரச்சினைகளை அரசிடம் எடுத்துச் செல்வதற்கான இயக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. நாளடைவில் அது அரசியல் கூட்டணியாக உறுமாற ஆரம்பித்தது, எனவே அக்கூட்டணியில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி வெளியேறியது.
சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி இறுதியில் அறிவிப்போம். பாஜக இடம்பெறாத கூட்டணியில் மட்டுமே நாங்கள் இடம்பெறுவோம். பாஜகவின் மதவாத அரசியலுக்கு பீகார் மக்கள் தேர்தல் மூலம் சரியான பாடம் புகட்டியுள்ளனர். அனைவரும் கருத்துரிமையை உபயோகிப்பதில் உள்ள வரைமுறையை உணர்ந்து செயல்பட்டால் பிரச்சினைகள் எழுவதற்கு வாய்ப்பில்லை.
இயற்கைப் பேரழிவுகளுக்கு ஆளும் அரசை குறை கூறக்கூடாது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு உரிய நிவாரணங்களை அளிப்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆளும் அரசு அடித்தட்டு மக்களின் தேவைகளை உணர்ந்து செயல்படுகிறது என்று கூறினார்.