அதிமுக, திமுகவுடன் ஒருபோதும் பாஜக கூட்டணி அமைக்காது ஜவ்டேகர் திட்டவட்டம்
சென்னை: தேர்தல்களில் அதிமுக, திமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்காது என்று தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
தமிழக தேர்தலில் தேமுதிகவை வளைக்க பெரும் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. தனித்துதான் போட்டி என்று தேமுதிக அறிவித்த பின்னர் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தாத பாஜக இலவு காத்த கிளியாக காத்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவ்டேகர், தேமுதிக தனித்து போட்டியிடுவது அதன் தனிப்பட்ட கருத்து. அது குறித்து நான் கருத்துத் தெரிவிக்க விரும்பவில்லை.
அதே சமயம், தமிழகத்தில் திமுக, அதிமுகவுடன் பாஜக ஒரு போதும் தேர்தல் கூட்டணி அமைக்காது. வரும் 19, 20 தேதிகளில் நடைபெறும் பாஜக தேசிய செயற்குழுவிற்குப் பின் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
இவ்வாறு பிரகாஷ் ஜவ்டேகர் தெரிவித்தார்.