சென்னையில் முழு அடைப்பு வெற்றி ... கடையடைப்பு, ஆட்டோ ஓடவில்லை, சாலைகள் வெறிச்சோடின...!
சென்னை: கர்நாடக அரசைக் கண்டித்து தமிழகம் தழுவிய அளவில் இன்று நடந்து கொண்டிருக்கும் முழு அடைப்பால் சென்னை மாநகரத்தில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியார் வானங்கள் எதுவும் இயக்கப்படாததால் சென்னையின் சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன.
காவிரி பிரச்சனையில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூருவில் தமிழர்கள் சொத்துக்கள் மீது வன்முறை தாக்குதல் நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட பேருந்துகள் லாரிகள் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்தாத கர்நாடக அரசைக் கண்டித்தும் மத்திய அரசை இந்த பிரச்சனையில் தலையிடக் கோரியும் தமிழகம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.
சென்னையைப் பொறுத்தவரை வணிகர் சங்கங்களோடு இணைக்கப்பட்டிருக்கும் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் எந்த சங்கத்திலும் இல்லாத கடைகள் கூட தாங்களாகவே முன் வந்து அனைத்துக் கடைகளையும் மூடி தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன.
இதனால் சென்னையில் உள்ள பெல்ஸ் சாலை, லாயிட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பாரதி சாலை, அண்ணா சாலை, ராதாகிருஷ்ணன் சாலை என பல சாலைகள் அமைதியாக காட்சி அளிக்கின்றன. மருந்துக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் மட்டும் ஒரு சில இடங்களில் திறக்கப்பட்டுள்ளன.
மேலும், அரசு பேருந்துகள் கூட பெரிய அளவில் இயக்கப்படாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. அதிமுக ஆட்டோ சங்கத்தைத் தவிர மற்ற அனைத்து ஆட்டோ சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால் சென்னை சாலைகளில் ஆட்டோக்கள் எதுவும் ஒடவில்லை. இதனால் சாலைகள் வெறிச்சோடியே காணப்படுகின்றன.
#TamilNaduBandh disrupts normal life, vehicles off road, shops remain closed (Visuals from Coimbatore) pic.twitter.com/7oBPR1pRD5
— ANI (@ANI_news) September 16, 2016
தனியார் பள்ளி சங்கங்கள் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ளதால் சென்னை உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பள்ளிகள் தங்கள் மாணவர்களின் காலாண்டு தேர்வுகளை நாளைக்கு ஒத்தி வைத்து வைத்துள்ளன. எனினும் அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கின்றன.