500 கடைகளை மூடினாலும் கூட கஜானாவுக்கு பெரிய பாதிப்பு வராது.. டாஸ்மாக் அதிகாரிகள் "சியர்ஸ்"!
சென்னை: டாஸ்மாக் திறந்திருக்கும் நேரத்தை மாற்றுதல், கடைகளின் எண்ணிக்கையை குறைத்தல் உள்ளிட்ட மதுக்கடைகள் தொடர்பான நடவடிக்கைகளால் தமிழக அரசின் கஜானாவிற்கு ஏதும் பாதிப்பில்லை என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் மதுவிலக்கு என்பது மாயாஜாலம் செய்தது எல்லாரும் அறிந்ததே. ஆனால், தங்களின் தேர்தல் வாக்குறுதியான ஆட்சிக்கு வந்ததும், படிப்படியான மதுவிலக்கு என்பதன் முதல்கட்டமாக, முதல்வர் ஜெயலலிதா மீண்டும் பதவியில் அமர்ந்ததும் மதுக்கடைகள் தொடர்பாக இரண்டு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
அதில், ‘மதுக்கடைகள் திறக்கும் நேரத்தை 10 மணி என்பதை மாற்றி, 12 மணி முதல் திறக்கப்படும் என்றும், முதற்கட்டமாக 500 கடைகள் மூடப்படும்' என்றும் ஜெயலலிதா அறிவித்தார்.
இந்த அறிவிப்புகளைக் கேட்டு மதுவிலக்கு கேட்டு போராடியவர்கள் மகிழ்ந்தாலும், இதனால் தமிழக அரசின் வருமானத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லையாம்.
டாஸ்மாக் கடைகள்...
அதாவது, தமிழகத்தில் சுமார் ஆறாயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் நாளொன்றிற்கு ரூ. 68 கோடி வரை வியாபாரம் நடக்கிறது. இதனால் அரசிற்கு அதிக லாபம் கிடைக்கிறது.
கண் துடைப்பு...
இப்படியிருக்க முதல்கட்டமாக 500 கடைகளை மூட அரசு முன்வந்துள்ளது. ஆனால், இந்த உத்தரவு வெறும் கண் துடைப்புதான், ஏனெனில் மூடப்படவுள்ள கடைகள் வியாபாரம் மந்தமாக உள்ள கடைகள் தான் எனக் கூறப்படுகிறது.
விற்பனை மந்தம்...
இதேபோல், டாஸ்மாக் மதுக்கடைகளின் திறக்கும் நேரத்தை மாற்றுவதாலும் அதிக பயன் இல்லை. ஏனெனில் காலை நேரத்தில் விற்பனை மந்தமாக இருக்கும். எனவே, அந்நேரத்தில் கடைகளை மூடி வைப்பதால், அரசுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டுவிடப்போவதில்லை.
வருமானம் பாதிப்பில்லை...
ஏனெனில், காலை 10 மணி முதல் 12 மணிவரை ஒரு மதுக்கடையில் சராசரியாக 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாகத்தான் மது விற்பனையாகிறதாம். அதோடு, நமது பாசத்திற்குரிய ‘குடி'மகன்கள் இரண்டு மணி நேரம் காத்திருந்து, தங்களது கடமையைச் செவ்வணே செய்து அந்த வருமானத்தையும் ஈடுகட்டி விடுவார்கள் என்பது அரசுக்கும் தெரியும்.
மாற்றமில்லை...
எனவே, ஜெயலலிதாவின் இந்தப் புதிய அறிவிப்புகளால், குடிமகன்களின் வாழ்க்கையிலோ, அரசு வருமானத்திலோ எந்த மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பதே அரசியல் விமர்சகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கருத்து.