அரசாணையில் இடம்பெற்றுள்ள தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிகள் தமிழகத்துக்கு பொருந்தாது: காமராஜ்
அரசாணையில் இடம்பெற்றுள்ள தேசிய உணவு பாதுகாப்பு திட்ட விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சென்னை: பொது விநியோகத் திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அறிவித்துள்ளார்.
ஆண்டுக்கு 1 லட்சம் வருமானம் இருப்பவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது எனத் தமிழக அரசு அரசிதழில் வெளியிடப்பட்டது. மேலும், ஏசி, பிரிட்ஜ், கார், 3 அறை கொண்ட வீடுகள் வைத்திருப்போர், அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது என்றும் அறிவிப்பு வெளியானது.
இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பிற்கு உணவுத் துறை அமைச்சர் காமராஜ் ஏற்பாடு செய்தார். அப்போது அமைச்சர் காமராஜ், பொதுவிநியோகத் திட்டம் சிறப்பாகச் செயல்படும் மாநிலம் தமிழகம் என்றும், தமிழகத்தில் மட்டும்தான் உணவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் எள் அளவும் மாற்றம் இல்லை என்றும் கூறினார்.
அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் தொடர்ந்து வழங்கப்படும் என்று கூறிய காமராஜ், பழைய விலையிலே பொருட்கள் வழங்கப்படும் என்றும், இதற்கென மாநில அரசின் நிதியில் இருந்து சிறப்பு திட்டம் செயல்படுத்த விலக்கு பெறப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார்.
மேலும், அரசாணையில் இடம்பெற்றுள்ள மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் தமிழகத்திற்கு பொருந்தாது என்று கூறிய காமராஜ், ரேஷன் பொருள் விநியோகத்தில் தற்போதைய நிலைமை தொடரும் என்றும், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்துவிட்டது என்பதற்காகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் காமராஜ் கூறியதாவது: மேலும், தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் கடைசியாக சேர்ந்த மாநிலம் தமிழகம்தான். இது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 2013ல் கொண்டு வரப்பட்டது. அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, ஏற்கனவே அனைவருக்கும் உணவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது எனவே இந்தத் திட்டத்தில் சேர மாட்டோம் எனக் கூறி மறுத்தார்.
எனினும், மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்தியதால், சில சலுகைகள் பெற்று அந்தத் திட்டத்தில் சேர ஜெயலலிதா முடிவு செய்தார். மாநில அரசு சிறப்பு திட்டங்களைச் செயல் படுத்துகிற போது, அதற்கு எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் மத்திய அரசு ஒத்துழைப்பு வேண்டும் என்று ஜெயலலிதா கேட்டார். அதன் பின்தான், மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தில் தமிழகம் இணைந்தது என்று காமராஜ் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.