ஓகி புயல் பாதிப்பு... குமரியில் களையிழந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. வீடுகளில் கருப்புக் கொடி
ஓகி புயலால் இதுவரை மீனவர்கள் கிடைக்காததால் சோகத்தில் உள்ள குமரி மாவட்ட மீனவ கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைஇழந்துள்ளது.
கன்னியாகுமரி: ஓகி புயலால் இதுவரை மீனவர்கள் மாயமாகியதால் சோகத்தில் உள்ள குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடவில்லை.
கடந்த மாதம் 30-ஆம் தேதி வங்கக் கடலில் ஓகி புயல் உருவானது. இது தென் தமிழக பகுதிகளான கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்த புயல் வந்ததை அறியாத மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். ஆனால் 26 நாட்கள் ஆகியும் காணாமல் போன மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை எதிர்நோக்கி சின்னதுறையில் கடற்கரையில் அமர்ந்து தங்கள் உறவினர்களுக்காக காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை நாடு முழுவதும கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்தில் ஏராளமான கிராமங்களில் கிறிஸ்துவர்கள் அதிகம் என்பதால் அங்கு ஆண்டுதோறும் இந்த பண்டிகை களைகட்டும்.
ஆனால் ஓகி புயல் பாதிப்பு காரணமாக குளச்சல், நீரோடி, சின்னத்துறை ஆகிய கிராமங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவில்லை. மேலும் அங்குள்ள தேவாலயங்களிலும் மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்படவில்லை.
ஆண்டுதோறும் கடலுக்குள் சென்று கொண்டாடும் கிறிஸ்துமஸ் விழாவும் இந்த ஆண்டு நடைபெறவில்லை. பல்வேறு கிராமங்களில் கருப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது.