ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்த கருத்துமே எனக்கு இல்லை... வைகோ தடாலடி
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து எந்த கருத்துமே எனக்கு இல்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.
சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து வைகோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில் எந்த கருத்துமே தனக்கு இல்லை என்றார் அவர்.
கடந்த 2009-இல் "நான் குற்றம்சாட்டுகிறேன்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் வைகோ கலந்து கொண்டு பேசினார். இதையடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக ஆயிரம்விளக்கு போலீஸார் தேசதுரோக வழக்கின் கீழ் வைகோவை கைது செய்து பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். எனினும் இந்த வழக்கானது எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த ஏப்.3-ஆம் தேதி வைகோ எழும்பூர் நீதி்மன்றத்தில் ஆஜராகி வழக்கை விரைவில் முடியுங்கள் அல்லது தன்னை கைது செய்யுங்கள் என்று கூறினார் .
ஜாமீன் கோரினார்
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதி கோபிநாத், ஜாமீனில் செல்கிறார்களா என்று கேட்டதற்கு வைகோ மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
புழலில் இருந்து விடுதலை
அதுதொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஜாமீன் கிடைத்ததை அடுத்து சுமார் 52 நாள்கள் சிறைவாசத்துக்கு பின்னர் அவர் இன்று விடுதலையானார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேட்டி அளித்தார்.
பிடித்த இடம்
அப்போது அவர் கூறுகையில் எனக்கு மிகவும் பிடித்த இடமே சிறைச்சாலைதான். காரணம் சிறையில்தான் எனக்கு செல்போன் அழைப்புகள் வராது, நிறைய புத்தகங்கள் படிக்கலாம். அனைத்து செய்தித்தாள்களையும் வரி விடாமல் படிக்கலாம்.
தனிமையில் சிந்தனை
சிறையில் இருந்து 1500 கடிதங்களை கட்சி நிர்வாகிகளுக்கு எழுதினேன். சிறைவாசத்தில் தனிமையில் யோசித்து அடுத்து நம் இயக்கத்தை வேகமாக முன்னெடுத்து செல்ல அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிக்க இந்த சிறைச்சாலை பயன்பட்டது.
ஏன் ஜாமீன்?
நான் சிறையிலிருந்து விடுதலை ஆக வேண்டும் என்று எங்கள் கட்சியின் அவைத் தலைவர், மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் நான் கலந்து கொள்வதாக ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டியதன்அ அவசியத்தை வலியுறுத்தினர். அதை ஏற்று வெளியே வந்தேன்.
ரஜினியின் அரசியல்
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து ஒவ்வொருத்தர் ஒவ்வொரு கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் என்னை பொருத்தமட்டில் எந்த கருத்தும் இல்லை என்றார் அவர்.