தமிழக அரசுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.. தினகரன்
தமிழக அரசுக்கும் அதிமுகவிற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்று அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: தமிழக அரசுக்கும் அதிமுகவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சென்னை பெசண்ட் நகரில் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: டுவிட்டரில் கமல் கூறியது பற்றி தமிழக முதல்வர்தான் பதில் சொல்ல வேண்டும். எங்களால் உருவாக்கப்பட்ட அரசுதான் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அரசுக்கும் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒரு சிலர் சேர்ந்து தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு மக்களை திசைத் திருப்பிக் கொண்டிருக்கிறார். கட்சியை கொல்லைப் புறமாக கைப்பற்ற அமைச்சர்களும் நிர்வாகிகளும் சதி செய்து வருகின்றனர்.
ஆபத்து அவர்களுக்குத்தான்
அவர்கள் இதுபோன்ற செயல்கள் செய்வதை நிறுத்த வேண்டும். இல்லை என்றால் அவர்கள் திருத்தப்படுவார்கள். ஜெயலலிதாவின் வழியில் அவர்கள் செல்லவில்லை என்றால் அவர்களுக்கு ஆபத்து நிச்சயம்.
சீனிவாசனுக்குத்தான் அசிங்கம்
திண்டுக்கல் சீனிவாசன் 10 ஆண்டுகளாக எங்கிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் கொடுத்த அமைச்சர் பதவியில் இப்போது இருக்கிறார். திண்டுக்கல் சீனிவாசனுக்கு வயதாகிவிட்டது. சசிகலா காலில் விழுந்த போட்டோக்களை எடுத்து வெளியில் விட்டால் அவருக்குத்தான் அசிங்கம்.
பயமே காரணம்
ஏப்ரல் மாதம் 10ம் தேதி வரை என்னுடன் ஆட்டோவிலும், ஜீப்பிலும் தொற்றிக் கொண்டு ஆர்.கே. நகரில் எனக்காக ஓட்டு கேட்டவர்கள்தான் இப்போது எனக்கு எதிராக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவாரத்தில் மாற்றிப் பேசுவதற்கு பயம்தான் காரணம்.
யார் எட்டப்பர்?
ஜெயக்குமாருக்கு பதவி கொடுத்தது சசிகலாதான். யார் எட்டப்பர் என்பது ஜெயக்குமார் கண்ணாடி முன் நின்று பார்த்தால் தெரியும். அதிமுகவின் தொண்டர்களின் மனசாட்சியைத் தொட்டுப் பார்த்தாலும் யார் எட்டப்பர் என்பது தெரியும்.
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.