வங்கிகளுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறையா? ‘வாட்ஸ்-அப்’ வதந்திக்கு வங்கி அதிகாரிகள் மறுப்பு
வங்கிகள் ஐந்து நாட்கள் விடுமுறை குறித்த வாட்ஸ் அப் செய்தி வதந்தி என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
சென்னை : வங்கிகளுக்கு வரும் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்கிற 'வாட்ஸ் அப்' செய்தி வதந்தி என்றும், வங்கிகள் வழக்கம் போல திறந்திருக்கும் என்றும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக வாட்ஸ் அப்பில், வரும் 29ம் தேதி வியாழக்கிழமை முதல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என்றும், அதனால் வங்கி தொடர்பான வேலைகளை விரைவாக முடித்துக்கொள்ள அறிவுறுத்தியும் செய்தி ஒன்றி வேகமாக பரவி வந்ததையடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
அந்த செய்தியில், வங்கிகளுக்கு 29ம் தேதி வியாழக்கிழமை மஹாவீர் ஜெயந்தி, 30ம் தேதி வெள்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்ரல் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, 2ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரிகள் கூறுகையில், 29 மற்றும் 30ம் தேதிகளில் மஹாவீர் ஜெயந்தி, புனிதவெள்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது உண்மைதான். ஆனால், 31ம் தேதி சனிக்கிழமை வங்கிகள் வழக்கம் போல செயல்படும். அதனால் வாடிக்கையாளர்கள் தங்களது பணப்பரிவர்த்தனைகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் அன்றைய தினம் செய்துகொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், ஏப்ரல் 2ம் தேதி ஆண்டு கணக்கு முடிப்பு தினம் அதனால் அன்றைக்கு வங்கிகள் திறந்திருக்கும். ஆனால், வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை மற்றும் சேவைகளை மேற்கொள்ளமுடியாது என்றும் தெரிவித்துள்ளனர்.