பதினான்கு வருடங்களாக பட்டாசில்லாமல் தீபாவளி- அசத்தும் ஈரோடு கிராமம்!
சென்னிமலை: தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகையின் முக்கிய அங்கமான பட்டாசினை ஒரு கிராம பஞ்சாயத்தே 14 வருடங்களாக பறவைகளுக்காக தவிர்த்து வருகின்றனர்.
இந்த கிராமங்களில் பட்டாசு வாசனை அறவே கிடையாது தீபாவளிக்கும் சரி, மற்ற பண்டிகைகளுக்கும் சரி.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையை அடுத்துள்ள வடமுகம் வெள்ளோடு கிராம பஞ்சாயத்து உட்பட்ட வி. மேட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம், தச்சன்கரைவழி, செம்மாண்டாம்பாளையம், மீனாட்சிபுரம், புங்கம்பாடி, ஆகிய கிராமங்களில் வெடி என்பது அறவே கிடையாது
பட்டாசு வெடிக்காமல் தீபாவளி:
இதை கேட்டால் ஆச்சரியமாகதான் இருக்கும் ஆனால் இப்படிதான் கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தீபாவளியை இந்த கிராம மக்கள் எந்த ஒரு பட்டாசும் வெடிக்காமல் கொண்டாடுகிறார்கள். இதற்கு காரணம் இங்கு அமைந்துள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயம்தான்.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம்:
இந்த வெள்ளோடு மேட்டுப்பாளையம் பறவைகள் சரணாலயத்தில் பல்வேறு பறவைகள் தங்கி உள்ளது. அவ்வப்போது வெளிநாட்டு பறவைகளும் வந்து செல்லும்.
தியாகம் செய்த மக்கள்:
அமைதியை தேடி வரும் பறவைகளுக்கு வெடி தொந்தரவாக இருக்க கூடாது என்பதற்காக இந்த பறவைகள் சரணாலயத்தை சுற்றி உள்ள கிராமங்களில் தீபாவளிக்கு பட்டாசு வெடி வெடிப்பதை மக்கள் தியாகம் செய்துள்ளனர்.
இந்த ஆண்டு தீபாவளி:
இதேபோல் இந்த ஆண்டும் நேற்று தீபாவளியன்று பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடினார்கள்.
திருவிழாவிற்கும் கிடையாது:
தீபாவளிக்கு மட்டுமல்ல இந்த பகுதியில் நடக்கும் கோவில் திருவிழாவிற்கு கூட வெடி என்பது கிடையாது.
சத்தமில்லா பட்டாசுகள் மட்டுமே:
சிறுவர்கள் மகிழ்ச்சிக்காக கம்பி மத்தாப்பூ, தரைசக்கரம் போன்ற பட்டாசுகளை கொளுத்தி தீபாவளி அன்று மகிழ்ந்தனர். பறவைகளின் நலனுக்காக இந்த தியாகத்தை செய்யும் இந்த கிராம மக்களை மாவட்டத்தின் மற்ற பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி உள்ளனர்.