கைது செய்யப்பட்ட பெண்ணின் மீது எந்த தாக்குதலும் நடத்தவில்லை- உடுமலை இன்ஸ்பெக்டர் பதில் மனு!
சென்னை: உடுமலைப்பேட்டையில் வாடகை வீட்டு உரிமையாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பெண்ணை போலீஸ் காவலில் வைத்து கொடூரமாக சித்ரவதை செய்ததாக கூறுவது அப்பட்டமான பொய் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மதுரை, மேலூரை சேர்ந்தவர் பி.ராஜகுமாரி. இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.
அதில், "என்னுடைய தாயார் சந்திரா உடுமலைப்பேட்டையில் தங்கியிருந்து ஒரு ஹோட்டலில் வேலை செய்து வந்தார். அவர் வசித்த வீட்டில் உரிமையாளர் லீலாவதியை மர்ம நபர்கள் கொலை செய்துள்ளனர்.
போலீசார் சித்ரவதை:
இதுகுறித்து உடுமலைப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, என் தாயாரை கடந்த ஆகஸ்டு 10 ஆம் தேதி பிடித்து சென்று, கொடூரமாக சித்ரவதை செய்துள்ளனர்.
அரை நிர்வாணமாக கொடுமை:
அவரை அரை நிர்வாணப்படுத்தி, தலைகீழாக தொங்க விட்டு, அடித்து உதைத்துள்ளனர். கை விரல்கள் நகங்களின் இடுக்கில் ஊசியை வைத்து குத்தி சித்ரவதை செய்துள்ளனர்.
விசாரணைக்கு கோரிக்கை:
பின்னர், என் தாயாரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய ஜெயிலில் அடைத்துள்ளனர். எனவே, இந்த சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்" என்று கூறியிருந்தார்.
சந்திரா நேரில் ஆஜர்:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ராமசுப்பிரமணியம், ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த சந்திராவை நேரில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
மருத்துவமனையில் சிகிச்சை:
அதன்படி, கடந்த 5 ஆம் தேதி நீதிபதி முன்பு சந்திரா ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அறிக்கை தாக்கல்:
இந்த நிலையில், நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை தன்னுடைய அறையில் வைத்து நீதிபதி விசாரித்தார். அப்போது சந்திராவுக்கு சிகிச்சை வழங்கிய டாக்டர்கள் தங்களது அறிக்கையை முத்திரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்தனர்.
தவமணி பதில் மனு:
இந்த வழக்கில் உடுமலைப்பேட்டை இன்ஸ்பெக்டர் எ.தவமணி தாக்கல் செய்த பதில் மனுவில், "மனுதாரர் ராஜகுமாரி தனது மனுவில் கூறியுள்ள அனைத்து தவறான குற்றச்சாட்டுகளையும் மறுக்கிறேன்.
காவலில் வைக்கவில்லை:
மனுதாரர் கூறியுள்ளபடி, ஆகஸ்ட் 10 ஆம் தேதி போலீஸ் காவலில் அவரது தாயார் சந்திரா வைக்கப்படவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
பொய் குற்றச்சாட்டுகள்:
சந்திரா அடித்து உதைக்கப்பட்டு, மிரட்டப்பட்டு, தவறாக நடத்தப்பட்டார் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். ராஜகுமாரியின் மனுவில் எந்த உண்மையும் இல்லை" என்று தெரிவித்துள்ளார்.