30% மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பு.. பீதியூட்டும் நிபா வைரஸ்.. அறிகுறி, சிகிச்சை வழிமுறைகள் என்ன?
Recommended Video
சென்னை: கேரளாவில் ருத்ரதாண்டவம் ஆடி வரும் நிபா வைரஸ் பாதிப்பு, அண்டை மாநிலமான தமிழகம், கர்நாடகா உள்ளிட்டவற்றுக்கும் பரவுமோ என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
நிபா வைரசில் இருந்து தப்பிக்க அது பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர மருந்துகள் இல்லை என்ற தகவல்கள் இந்த பீதியை இன்னும் அதிகரிக்கின்றன.
உலகில் முதல் முறையாக, மலேசியாவில் 1998ல் நிபா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. பன்றி பண்ணையில் பணியாற்றிய பணியாளர்கள் மூலம் இந்த வைரஸ் அப்போது பரவியது. சுமார் 265 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மலேசியாவின் நிபா என்ற கிராமத்தில் முதல் பாதிப்பு கண்டறியப்பட்டதால்தான் இதற்கு நிபா வைரஸ் என்ற பெயரே வந்தது.
இந்தியாவில் எப்போது?
2001ல் மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் 66 பேர் பாதிக்கப்பட்டனர். 45 பேர் பலியாகினர். 2007ல் மேற்கு வங்கத்தின் நாதியா பகுதியில் 5 பேர் பாதிக்கப்பட்டு அவர்கள் உயிரிழந்தனர். இதன்பிறகு மவுனமாக இருந்த நிபா வைரஸ் 2013ல் வங்கதேசத்தை ஆட்டிப்படைத்தது. 24 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு 21 பேர் பலியாகின்றனர்.
நிபா வைரசுக்கு மருந்து இல்லை
தற்போதுவரை நிபா வைரசுக்கு எந்த மருந்தும் கிடையாது. நரம்பு மண்டலம், மூளையை இந்த வைரஸ் பாதிக்க கூடும். நோயாளிகளை தனிமைப்படுத்தி, அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளிப்பது மட்டுமே மருத்துவர்களுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு. நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதம் பேர் பலியாகியுள்ளனர். 30 சதவீதம் பேர் மட்டுமே தங்களது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மூலம் பிழைத்துள்ளனர். எனவேதான் இது மோசமான பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.
நிபா பரவுவது எப்படி
வைரஸ் பாதிப்புள்ள வவ்வால்கள் கடித்த பழத்தை சாப்பிடும் மனிதனுக்கு நிபா வைரஸ் பரவக்கூடும். வவ்வால்கள் மூலம், பன்றிகளுக்கும் அதன் மூலம் மனிதர்களுக்கும் கூட நிபா வைரஸ் பரவியுள்ளது. வவ்வால் கடித்த பழங்கள், கீழே விழுந்த பிறகு எடுக்கப்பட்ட பழங்களை சாப்பிடுவதை தவிர்ப்பதன் மூலம் நோய் பாதிப்பு ஏற்படாமல் தப்பிக்கலாம்.
நிபா அறிகுறிகள்
நிபா வைரஸ் பாதித்துள்ளது என்பதை சில அறிகுறிகளை வைத்து தெரிந்து கொண்டு உடனே சிகிச்சைக்கு விரையலாம். காய்ச்சல், தலைவலி, சோர்வு, தலை சுற்றுவது, மனநலனில் மாற்றம் போன்றவை இதற்கான அறிகுறிகள். நோய் பாதிப்பு அதிகரித்தவர்கள் கோமா நிலைக்கு சென்று, உயிரிழப்பை சந்தித்துள்ளனர்.