தமிழக மக்களே அஞ்சவேண்டாம்... இப்போதைக்கு புயல் வராது: ரமணன் ஆறுதல்
சென்னை: தமிழகத்தில் தற்போது புயலுக்கு வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து வருகிறது. அத்துடன், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடந்த சில தினங்களாக வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி மறுநாள் காலை வரை இடைவிடாது கொட்டித் தீர்த்த மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.ராணுவம், கடற்படை, பேரிடர் மீட்புப் படையினர் களமிறங்கியதால் மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் வரும் ஞாயிறன்று 22ம் தேதி மிகப்பெரிய புயல் தமிழகத்தைத் தாக்கும் என்று பஞ்சாங்கத்தில் கூறப்பட்டுள்ளதாக வாட்ஸ் ஆப் மூலம் தகவல் பரவி வரவே, மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இவர்களுக்கு நிம்மதி தரும் தகவல் ஒன்றினை கூறியுள்ளார் வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன்.
புயல் தாக்காது... மழை பெய்யும்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தென்மேற்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை வடக்கு நோக்கி நகர்ந்து ஆந்திராவில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலை கொண்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சியால் தற்போதைக்கு தமிழகத்திற்கு புயல் அபாயம் இல்லை என்று கூறிய அவர், தமிழகத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றார். சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. புயல் தாக்குவதாக இருந்தல் ஒருவாரத்திற்கு முன்னதாகவே தெரியவந்துவிடும் தற்போது புயல் தாக்க வாய்ப்பு இல்லை என்றும் ரமணன் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 10 செ.மீ, ராஜபளையத்தில் 9 செ.மீ, விருதுநகரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.