25 ஆண்டுகளில் முதல் முறை.... ஜெ. வாழ்த்து தெரிவிக்காத தீபாவளி!
மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதால் கடந்த 25 ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவிக்காத தீபாவளியாகிவிட்டது.
சென்னை: கடந்த 25 ஆண்டுகளாக தொடர்ந்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்து வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் இந்த ஆண்டு அவர் வாழ்த்து தெரிவிக்காத தீபாவளியாக மாறியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்றதில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் வாழ்த்து தெரிவித்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவருக்கு நுரையீரல் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், அதற்கான சிகிச்சையை அளித்து வருவதாகவும் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதனிடையே, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அப்போலோ வந்து சிகிச்சை அளித்துச் சென்றனர். சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபிஸ்டுகள் இருவர் சென்னை வந்து ஜெயலலிதாவிற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் உதவி புரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகையின் போது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல் நிலை சரியாகாமல் மருத்துவமனை இருப்பதால் அதிமுகவினர் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தீபாவளிக்கு முன்பாக ஜெயலலிதா உடல் நலம் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று அதிமுகவினர் யாகங்கள், பூஜைகள், பால்குடம் ஊர்வலம், அலகு குத்தி ஊர்வலம், காவடி, கோமாதா சிறப்பு பூஜை என செய்து வருகின்றனர்.
என்றாலும், இன்னமும் ஜெயலலிதா குணமடைந்து வீடு திரும்பவில்லை. உடல் நிலை காரணமாகவும், மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதன் காரணமாகவும் ஜெயலலிதாவால் இந்த ஆண்டு தீபாவளி வாழ்த்தை தெரிவிக்க இயலாமல் போய்விட்டது. 25 ஆண்டுகளில் முதல் முறையாக அவர் வாழ்த்து சொல்லாத தீபாவளி நாளை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட உள்ளது.
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள இந்த தீபாவளி அதிமுகவினருக்கு ஒரு சோகமான தீபாவளியாகத்தான் இருக்கிறது என்றாலும் ஜெயலலிதாவின் வாழ்த்து சொல்லாத தீபாவளி இது என்பதால் அவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.