7 நாளாகியும் உக்கிரம் குறையாத ஜல்லிக்கட்டு புரட்சி.. நிமிடத்துக்கு நிமிடம் பெருகும் எழுச்சி!
ஜல்லிக்கட்டு புரட்சி தொடங்கி 7 நாட்களாகியும் சற்றும் வீரியம் குறையாமல் நிமிடத்துக்கு நிமிடம் எழுச்சி பெற்று வளர்ந்து கொண்டிருக்கிறது.
சென்னை: ஜல்லிக்கட்டு புரட்சியின் எழுச்சி நாளுக்கு நாள் மணிக்கு மணி நிமிடத்துக்கு நிமிடம் கொஞ்சம் கூட குறையாமல் பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போகிறது. அவசரச் சட்டத்தை நிராகரித்து விட்ட இளைஞர் கூட்டம் தொடர்ந்து தனது புரட்சிப் போராட்டத்தை சற்றும் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டிருப்பது வியக்க வைக்கிறது.
சென்னை மெரீனா கடற்கரை, அலங்காநல்லூர், சேலம், கோவை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் தொடர்ந்து போராட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எங்குமே போராட்டத்தின் வேகமோ, மக்களின் கோபமோ சற்றும் குறையவில்லை.
அவசரச் சட்டம் எங்களை ஏமாற்றும் ஆயுதம். அதற்கு நாங்கள் பலியாக மாட்டோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளையோர் திட்டவட்டமாக கூறி விட்டனர். தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். இறுதி வரை போராடுவோம், நிரந்தர சட்டப் பாதுகாப்பு வரும் வரை போராடுவோம் என்று உறுபதி படக் கூறி விட்டனர் மக்கள்.
ஸ்தம்பித்த சென்னை
இன்று சென்னை நகரம் போராட்டக்காரர்களால் ஸ்தம்பித்து்ப போய் விட்டது. பஸ், லாரி, கார், வேன், ஆட்டோ, ரயில் என எந்த வாகனத்தைப் பார்த்தாலும் கருப்பு உடையுடன் போராட்டக் காரர்கள் மெரீனாவை நோக்கி படையெடுத்தனர்.
லட்சோபம் லட்சம்
கடற்கரையில் லட்சக்கணக்கானோர் அமர்ந்திருக்கிறார்கள் என்றால் மெரீனாவை நோக்கி படையெடுத்தோர் பல லட்சம் பேராக இருக்கும். வரலாறுக்கு மேல் வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறது சென்னை புரட்சி.
குடும்பம் குடும்பமாக
குடும்பம் குடும்பமாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். குழந்தைகளுடன்தான் பலரைக் காண முடிகிறது. அத்தனை பேரும் ஒரு முடிவு தெரியாமல் விடக் கூடாது என்ற உத்வேகத்தில் இருப்பதைக் காண முடிந்தது.
அலங்காநல்லூர்
அலங்காநல்லூரிலும் போராட்டம் தொடர்ந்து அதே முறுக்குடன் உள்ளது. அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த நடந்த முயற்சியை வெற்றிகரமாக முறியடித்த மக்கள் விடாமல் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
கோவை - சேலம்
கோவை, சேலம், நெல்லை என எங்கு பார்த்தாலும் ஜல்லிக்கட்டு புரட்சியின் எழுச்சி தீ ஜூவாலை போல கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருப்பதைக் காண முடிகிறது. இந்த அக்கினிச் சூட்டில்சிக்கி என்னவெல்லாம் கருகப் போகிறதோ என்பதுதான் இப்போதைய ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.