ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் ஏழு மாதக் குழந்தை பலி: வீடியோ
வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழுமாதக் குழந்தை பலியானது. இதனால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி: மணப்பாறை அருகேயுள்ள வளையப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் ஏழு மாதக் குழந்தை மர்மக் காய்ச்சலுக்கு பலியானது. மருத்துவர் வேண்டும் என ஊர்மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு உண்டானது.
மணப்பாறை அருகேயுள்ள வளையப்பட்டியில் ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மருத்துவரும் செவிலியரும் தொடர்ந்து இருப்பது இல்லை.
மேலும் ஊரில் பல வாரங்களாக சிறுவர் முதல் பெரியவர் வரை பலருக்கு மர்மக் காய்ச்சல் வந்து சிரமப்பட்டுக்கொண்டுள்ளனர். இவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்லும் போது அங்கு மருத்துவர் இல்லாத காரணத்தால் காய்ச்சலுடன் துன்பப்பட்டுக்கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏழுமாதக் குழந்தை உயிரிழந்தது. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மருத்துவர்கள் வருவார்கள் என உறுதியளித்த பிறகு கலைந்து சென்றனர்.