ராஜ்யசபா தேர்தல்: அதிமுக, திமுக, சிபிஎம் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்பு
சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு பரிசீலனையில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஆறு பேரின் வேட்பு மனுக்களும் ஏற்கப்பட்டுள்ளதால், அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப் படுகின்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து எம்.பி.க்களாக இருக்கும் 18 பேரில் 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் 2-ந்தேதியுடன் முடிகிறது. இதையடுத்து காலியாக உள்ள 6 இடங்களுக்கு வரும் 7-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்தது.
ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதல் நாளே தி.மு.க. வேட்பாளர் திருச்சி சிவா வேட்புமனு தாக்கல் செய்தார்.
அ.தி.மு.க. சார்பில் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், முத்துக்கருப்பன், செல்வராஜ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில் டி.கே. ரங்கராஜன் நிறுத்தப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர்கள் சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், எஸ்.முத்துக்கருப்பன், கே.செல்வராஜ் ஆகிய 4 பேரும் நேற்று முந்தினம் மனுதாக்கல் செய்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ரங்கராஜனும் அன்றே தனது மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தலில் காங்கிரஸ் மற்றும் தே.மு.தி.க. தரப்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. ஆனால் அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
வேட்பு மனு தாக்கலுக்கான காலக்கெடு நேற்றோடு மாலை 3 மணியோடு முடிவடைந்த நிலையில், சுயேச்சை வேட்பாளர்கள் இரண்டு பேரரையும் சேர்த்து 8 பேர் ராஜ்யசபா தேர்தலுக்கு மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. அதில் இரண்டு வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப் பட்டது. காலியான ஆறு இடங்களுக்கு சரியாக ஆறு பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்திருப்பதால், போட்டியின்றி அவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.
நாளை மறுதினம் வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி தினமாகையால், அன்று 6 பேரும் தேர்வு செய்யப்பட்டது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.