'நீட்' தேர்வில் ஊக்கமதிப்பெண் கிடையாது... மருத்துவ கல்வி இயக்கம் பட்டியல் வெளியிட்டு அதிரடி
தமிழ்நாடு முதுநிலை மருத்துவப் படிப்புக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு நீட் தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ கல்வி இயக்கம் பட்டியல் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: 'நீட்' தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவுபடி இப்பட்டியலை மருத்துவக் கல்வி இயக்கம் வெளியிட்டது.
கடினமான பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு வந்தது. அவர்கள் நீட் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்ணோடு இந்த 10 மதிப்பெண்கள் சேர்த்துக்கொள்ளபட்டது. ஆனால் அதை எதிர்த்து மற்ற மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் கே.கே.சசிதரன், எஸ்.எம்.சுப்பிரமணியம் கொண்ட அமர்வு விசாரித்தது. அதில் ஒரு நீதிபதி கே.கே.சசிதரன்,'தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்க குறிப்பேடு செல்லும் என்றும், அதில் குறிப்பிட்டுள்ள விதிகளின்படி மாணவர்கள் சேர்க்கையை நடத்தலாம்' என்றும் உத்தரவிட்டார்.
ஆனால் மற்றொரு நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம்,'முதுகலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரேவிதமாக இருக்கவேண்டும். உச்சநீதிமன்றமும் பல தீர்ப்புகளில் இதைத்தான் உறுதி செய்துள்ளது. எனவே, இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றித்தான் மாணவர்கள் சேர்க்கை நடத்தவேண்டும்' என்று றுபட்ட தீர்ப்பை உத்தரவிட்டார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், 3ஆவது நீதிபதி எம்.சத்தியநாராயணன் இந்த வழக்கை விசாரித்தார். அவர் கூறியுள்ள தீர்ப்பில்,'' நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த தீர்ப்பை உறுதி செய்கிறேன். கடினமான பகுதிகளில் பணியாற்றிய டாக்டர்களுக்கு, ஊக்க மதிப்பெண்ணாக, அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற வீதத்தில் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு, 30 சதவீத மதிப்பெண் வழங்கலாம் என்று பிரிவு 9 கூறுகிறது. கடினமான பகுதிகள் எவை என்று தமிழக அரசு நிர்ணயம் செய்யலாம்.
ஆனால், ஊக்க மதிப்பெண் வழங்குவது தொடர்பாக இந்திய மருத்துவ கல்வி கவுன்சிலின் விதிகளைத்தான் பின்பற்ற வேண்டும். இதுதொடர்பாக பல உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவுகளை தெரிந்து இருந்தும், அந்த உத்தரவை நிராகரித்துவிட்டு, தமிழக அரசு இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிராக, ஊக்க மதிப்பெண் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை உருவாக்கியுள்ளது. இந்த விசித்திரமான சூழ்நிலை ஏற்பட்டதற்கு, தமிழக அரசை தவிர வேறு யாரையும் குற்றம் சொல்ல முடியாது.
எனவே, நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பை உறுதி செய்கிறேன். இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, கடினமான பகுதியில் பணியாற்றிய அரசு டாக்டர்களுக்கு, அவர்கள் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில், ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற ரீதியில் அதிகபட்சம் 30 சதவீதம் மதிப்பெண்ணை, ஊக்க மதிப்பெண்ணாக வழங்கவேண்டும்.
இது தொடர்பாக தமிழக அரசு உருவாக்கிய விதிகளை பின்பற்றக்கூடாது. அதே நேரம், இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி, கடினமான பகுதிகளை தமிழக அரசு வகைப்படுத்திக்கொள்ளலாம்'' என உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பின் எதிரொலியால், இந்த விதிகளின்படி தான் தமிழக அரசு மாணவர்கள் சேர்க்கையை மேற்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கிராமபுறங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஏற்கனவே பெற்று வந்த 50% இடஒதுக்கீடு கிடைக்காது என்பதால் கிரமப்புற மருத்துவமனைகளில் பணியாற்ற மருத்துவர்கள் ஆர்வமுடன் செல்வார்களா என்பது கேள்விக்குறியே!