மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது -சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மருத்துவ முதுநிலை படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் கிராமப்புறங்களில் பணியாற்றும் மாணவர்களுக்கு தரப்படும் ஊக்க மதிப்பெண்கள் இனி கிடையாது என்று உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா தீர்ப்பளித்தார்.
சென்னை: மருத்துவ உயர்கல்வியில் 50% இடஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது என்றும் கிராமப்புற அரசு மருத்துவமனையில் பணியாற்றுவோருக்கு சலுகை இல்லை என்றும் உயர்நீதிமன்ற 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா தெரிவித்தார்.
மருத்துவக் கவுன்சில் விதிப்படி நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்களில் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண் சேர்க்கப்பட்டால் தனக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவ மேல்படிப்புக்காக இடம் கிடைத்துவிடும். எனவே, மருத்துவக் கவுன்சில் விதிகளின் அடிப்படையில் எனது ஊக்க மதிப்பெண்ணைக் கணக்கிடுமாறு உத்தரவிட வேண்டும் என்று டாக்டர் ராஜேஷ் வில்சன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்த கடந்த மாதம் உத்தரவிட்டார்.
போராட்டம்
இதனால் தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு சேர்க்கையை மருத்துவ கவுன்சில் விதிகளை பின்பற்றி நடத்துவதா? இல்லை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்தது. இதுபோன்ற குழப்பமான உத்தரவால் தங்களுக்கான சலுகைகள் பறிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தமிழகம் முழுவதும் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இரு நீதிபதிகள் விசாரணை
இது தொடர்பாகத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனு இரு நீதிபதிகள் அமர்வுக்கு வந்தது. கடந்த 3-ம் தேதி இருவரும் தீர்ப்பளித்தனர். நீதிபதி கே.கே.சசிதரன் தனது தீர்ப்பில், மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை தமிழக அரசின் விளக்கக் குறிப்பேட்டை பின்பற்றி நடத்திக் கொள்ள தமிழக அரசுக்கு முழுஅதிகாரம் உள்ளது. தமிழக அரசின் விளக்கக் குறிப்பேடு மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு முரணாக இல்லை என தீர்ப்பளித்தார்.
மாறுபட்ட தீர்ப்பு
ஆனால் அதே சமயம் நீதிபதி கே.கே.சசிதரனின் தீர்ப்பிற்கு முரணாக நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தீர்ப்பளித்தார். மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கை என்பது நாடு முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். எனவே தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி வரும் மே 7-ம் தேதிக்குள் தரவரிசை பட்டியல் தயாரித்து அதன் அடிப்படையில் கலந்தாய்வை திட்டமிட்டபடி நடத்த வேண்டும் எனக் கூறியிருந்தார்.
3-ஆவது நீதிபதி தீர்ப்பு
இருவரும் முரண்பட்ட கருத்துகளை தெரிவித்தனர். இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் 3-ஆவது நீதிபதி சத்யநாராயணா விசாரித்து வந்தார். அதன்படி இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது நீதிபதி கூறுகையில், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளையே எம்.டி.எம்.எஸ் சேர்க்கையில் பின்பற்ற வேண்டும். எனவே அரசு மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பில் ஊக்க மதிப்பெண் கிடையாது என்று தீர்ப்பளித்தார்.
மேல்முறையீடு
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு திருப்தி அளிக்கவில்லை. இந்த தீர்ப்பால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர். எனவே மேல் முறையீடு செய்வோம் என்று மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.