சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, 18 தொகுதி இடைத்தேர்தல் நடத்த தடை நீடிப்பு - ஹைகோர்ட்
சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கூடாது என்ற தடை நீடிக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதித்த இடைக்கால தடை நீடிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. அதேபோல் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் விதித்த தடை நீடிக்கிறது எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த இன்று அக்டோபர் 4ஆம் தேதி வரையில் வரையில் உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருந்தது. இன்று 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.
தினகரன் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிட்டார். வாதங்களை கேட்ட நீதிபதி ரவிச்சந்திரபாபு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதித்த இடைக்கால தடை நீடிக்கும் என்று உத்தரவிட்டார். 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தவும் தடை நீடிக்கிறது எனவும் நீதிபதி பிறப்பித்த ஆணையில் தெரிவித்தார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கு விசாரணையை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். அதேநேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான வழக்கு விசாரணை வரும் 12-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.