செப். 1 முதல் ரயில் பயணிகளுக்கு இப்படி ஒரு இடி!
சென்னை: செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் ரயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச இன்சூரன்ஸ் நிறுத்தப்படுகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் இது குறித்து கூறுகையில், இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (ஐஆர்சிடிசி) வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இலவச காப்பீடு திட்டத்தை ரத்து செய்ய உள்ளது.
அதற்கு பதிலாக பயணிகள் தேவைப்பட்டால் பணம் செலுத்தி இன்சூரன்சை பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.
டிஜிட்டல் பரிவர்த்தனையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இலவச இன்சூரன்ஸ் திட்டத்தை ஐஆர்சிடிசி அறிமுகம செய்து வந்தது.
விபத்தால் பயணி உயிரிழந்தால், அதிகபட்சமாக 10 லட்சம் வரை இழப்பீடு, பயணத்தின்போது விபத்தால் உடல் உறுப்புகளை இழந்தால், ரூ.7.5 லட்சம், காயமடைந்தால் 2 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. விபத்தால் இறந்தோர் சடலத்தை கொண்டு செல்ல பத்தாயிரம் ரூபாய் போக்குவரத்து செலவாக கொடுக்கப்பட்டது.
இன்ஷூரன்ஸ் தொகை என்ன என்பது இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார். ரயில் பயணிகள் காப்பீடு திட்டத்தால் பலர் பயனடைந்து வந்த நிலையில், இப்போது அந்த திட்டத்திற்கும் ஆப்பு வைக்கப்பட்டுள்ளது.