நான் கேட்ட சுதந்திரம் கிடைக்கவில்லையே.. சிறையில் இருப்பதை போல உணருவதாக ஹாதியா ஆதங்கம்
Recommended Video
சேலம்: சுதந்திரமாக இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் கேட்டேன், ஆனால் நான் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைக்கவில்லை என்று சேலத்தில் இன்று ஹாதியா செய்தியாளர்களிடம் வேதனை தெரிவித்தார்.
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த அசோகன் என்பவர் மகள் அகிலா என்ற இந்து பெண்ணை ஷபின் ஜகான் என்ற இஸ்லாமிய வாலிபர் காதல் திருமணம் செய்தார்.
ஆனால், அகிலாவை ஹதியா எனப் பெயரிட்டு, இஸ்லாம் மதத்துக்கு மாற்றித் திருமணம் செய்துகொண்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, இந்தத் திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரி, கேரள ஹைகோர்ட்டில் அசோகன் வழக்குத் தொடர்ந்தார்.
பெற்றோருடன் செல்ல தயாரில்லை
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திருமணம் செல்லாது என தீர்ப்பளித்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் ஷபின் ஜகான் அப்பீல் செய்தார். ஹாதியாவின் கருத்தைக் கேட்க வேண்டும் என கூறிய சுப்ரீம் கோர்ட், அவரை நேரில் ஆஜர்படுத்த கேரள அரசுக்கு உத்தரவிட்டது. ஹாதியா உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன் ஆஜர்படுத்தப்பட்டபோது, தான் தனது பெற்றோருடன் வாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டார்.
சேலத்தில் படிப்பு
அதேநேரம் படிப்பை தொடரப்போவதாகவும், அதுவும் தன் கணவர் செலவிலேயே படிக்க விரும்புவதாகவும் நீதிமன்றத்தில் ஹாதியா தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள் அதற்கு அனுமதித்தனர். சேலத்தில் உள்ள சிவராஜ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நர்சிங் படிக்க ஹாதியாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
போலீஸ் பாதுகாப்பு
ஹாதியாவின் கார்டியனாக, கல்லூரி டீனையே நியமித்து உத்தரவிட்டது சுப்ரீம் கோர்ட். சேலத்தில் படிக்கும்போது அவருக்கு தமிழக அரசு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து நேற்று இரவு ஹாதியா சேலம் வந்தார். இன்று அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார்.
சுதந்திரம் இல்லை
எனது கணவர் ஷபீனை இதுவரை என்னால் தொடர்பு கொள்ள இயலவில்லை. அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கும் என எதிர்பார்க்கிறேன். நீதிமன்ற உத்தரவு குறித்து கல்லூரிக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. சுதந்திரமாக இருக்க வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் கேட்டேன், ஆனால் நான் எதிர்பார்த்த சுதந்திரம் கிடைக்கவில்லை. சிறை போல இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.