பெண்கள் மீதான குற்றங்களை குறைக்க தேவை ஆன்மீக கல்வி: ராமகோபாலன்
வேலூர்: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா கூறுவது ஏமாற்று வேலை. தமிழகம் அமைதிப் பூங்காவாக இல்லை என இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து வேலூரில் இந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராம கோபாலன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் செல்ல முடியாத அளவுக்கு வன்முறை நடக்கிறது. இந்த நிகழ்வுகளுக்கெல்லாம் காரணம் ஆங்கிலேயர் காலத்து கல்விமுறை தான். எனவே கல்வி முறையில் மாற்றம் செய்து ஆன்மிகம், சமய கல்வி முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக முதல்வர் கூறுவது ஏமாற்று வேலை. தமிழகம் அமைதி பூங்காவாக இல்லை. தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் கட்சி பேதமின்றி கைது செய்யப்பட வேண்டும்.
சிலை கடத்தல் வழக்கில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் சிறப்பாக செயல்படுகிறார். அவருக்கு பாராட்டு தெரிவிப்பதுடன், விருது அளிக்க வேண்டும். வேலூர் மாவட்டம், ஆம்பூரில் கலவரம் நடைபெற்று ஒரு வருடம் ஆன நிலையிலும் கலவரக்காரர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சூறையாடப்பட்ட இந்துக்களின் கடைகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
மற்ற மதங்களுக்கு வழங்கப்படுவதைப் போல மாரியம்மன் கோயில் திருவிழாவில் கூழ் ஊற்றுவதற்கான அரிசி வழங்க மாநில அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை. இந்தக் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் இந்து முன்னணி அறவழியில் போராடும். கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வரும் ஜூலை 17-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறினார்.