அப்ப இத்தனை நாளா மதுரை மதுரைன்னு சொல்லிட்டிருந்தது எல்லாமே டூப்பா கோப்பால்??
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.
Recommended Video
சென்னை: வளர்ச்சி வளர்ச்சி என்று கூறிக் கொண்டே மத்திய அரசும் மாநில அரசும் நம்மை எங்கு கொண்டு போய் நிறுத்த போகிறார்களோ தெரியவில்லை.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனுமதியே இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த 4 வருடங்களாகவே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய போகிறது என்ற பேச்சாகவே இருந்தது.
பட்ஜெட்டில் நிதி
இடத்தை தேர்வு செய்வதற்கே படாத பாடு பட்டு, ஒருவழியாக 4 வருடம் கழித்து மதுரை தேர்வானது. பிறகு மருத்துவமனை அமைய 2015-ம் ஆம் ஆண்டே இதற்கான நிதியும் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கவும்பட்டது.ஆனால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் மீண்டும் மோடி அரசு நமக்கு ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.
வெறும் அனுமதிதான்
தமிழகத்தின் நலன் என்பதே காற்றில் பறந்து கொண்டிருக்கிறது. இந்தியா டூடே இதழ் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் படி பெற்ற தகவல்களில் மதுரையில் மருத்துவமனைக்கு இன்னும் மத்திய அரசு ஒப்புதலே வழங்கவில்லை என தெரியவந்துள்ளது. தமிழகம் மட்டுமில்லை... ஜம்மு, காஷ்மீர், பீகார், தமிழ்நாடு, குஜராத் ஆகிய மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனையை ஆரம்பிக்க அனுமதி மட்டும்தான் வழங்கியுள்ளது. ஆனால் 10 பைசா கூடஇதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை என்பது அம்பலமாகி உள்ளது.
மத்திய சுகாதார துறை
பிரதமராக மோடி பொறுப்பேற்றபோது நாடு முழுவதும் 13 எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றார். ஆனால் ஒன்றைக்கூட இதுவரை காணோம். எல்லாமே வெறும் அறிவிப்பாக இருந்தால் எப்போதுதான் அவை அரங்கேற்றப்படும் என்றும் தெரியவில்லை. தமிழகத்தில் இதற்கான போராட்டங்களும் முடிந்தவரை செய்து முடித்தாயிற்று. ஆனால் மத்திய சுகாதாரத்துறையின் செவிகளுக்கு இது இன்னமும் போய் சேரவேயில்லை.
அமைச்சர்களின் உறுதி
மத்திய அரசுதான் இப்படி வஞ்சித்து வருகிறது என்றால், மாநில அமைச்சர்களோ மதுரையில் எய்ம்ஸ் வரப்போகிறது என்பதற்கான நம்பிக்கையை எக்கச்சக்கமாகவே நமக்கு ஊட்டிவிட்டனர். வருவாய்த்துறை அமைச்சர் ஒருமுறை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுவது உறுதி என்றார். இவரை தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜூவும் ஆமாம்.. விரைவில் நம் மாவட்டத்திற்கு எய்ம்ஸ் வரப்போகிறது என்றார்.
எதை சொன்னாலும் நம்புவதா?
எப்போதெல்லாம் இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகிறாரோ, அப்போதெல்லாம் எய்ம்ஸ் விரைவில் தொடங்கப்படும் என்றார். என்ன மனப்பான்மையில், என்ன ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர்கள் இப்படியெல்லாம் இதுவரை தமிழக மக்களுக்கு உறுதியும் நம்பிக்கையும் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. இன்னும் மத்திய அமைச்சரவை ஒப்புதலே வழங்கவில்லை என்பது அதிர்ச்சிக்குரியதாக உள்ளது. தமிழக மக்கள் எதை சொன்னாலும் நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற மனப்பான்மைதான் இதற்கெல்லாம் காரணமா என தெரியவில்லை.
எய்ம்ஸ் என்பது கனவா?
இப்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதலே வழங்கவில்லை என்றும் எந்த நிறுவனத்திற்கு டெண்டரும் விடவில்லை என்று பட்டவர்த்தனமாக தெரியவந்ததையடுத்து, மத்திய அரசு தரப்பிலிருந்து பாஜக லைவர் தமிழிசை சவுந்தரராஜனும், மாநில அரசு தரப்பிலிருந்து அமைச்சர் விஜயபாஸ்கரும் மீண்டும் மீண்டும் உறுதி கொடுக்க துவங்கி இருக்கிறார்கள். தொப்பூருக்கு எப்போது ஒப்புதல் கிடைத்து, எப்போது நிதி ஒதுக்கி, எப்போது மருத்துவமனையை கட்டி முடிப்பது? நம் மாநிலத்துக்கும் உலகத்தரமான மருத்துவமனை ஒன்று வேண்டும் நினைத்தது தப்பா? அரசியல் தலையீடுகள் இன்றி ஏழை மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை தமிழக மக்களுக்கு கிடைக்கவே கிடைக்காதா?