தமிழக அரசுக்கு 'கட்ஸ்' இல்லை என்ற ராம மோகன் ராவ்.. நடவடிக்கை எடுப்பாரா முதல்வர்?
தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
சென்னை :தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், வருமான வரித்துறை சோதனைக்குப் பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தலைமைச் செயலகத்தில் வருமானத்துறையின் சோதனையை தடுக்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லாமல் போய்விட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக தலைமைச்சச் செயலாளராக இருந்த ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பல லட்சம் ரூபாய் பணம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து அவர் தலைமைச் செயலாளராக நீடிக்க எதிர்ப்பு கிளம்பியது. இதைத்தொடர்ந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்
இந்நிலையில் ராம மோகன் ராவ் இன்று சென்னை அண்ணாநகரில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
தனது மகனுக்கான வாரண்ட்டை வைத்துக்கொண்டு தனது வீட்டில் வருமான வரித்துறையினர் எப்படி சோதனை நடத்தலாம் என்று அவர் கேள்வி எழுப்பினார். அதுவும் துணை ராணுவத்தின் கட்டுப்பாட்டில், துப்பாக்கி முனையில் தன்னை வைத்து சோதனை நடத்தியதாகவும் ராம மோகன் ராவ் தெரிவித்தார்.
மேலும் தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் துணை ராணுவத்தினருக்கு என வேலை என்றும் ராம மோகன் ராவ் கேட்டார். தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை நுழைவதை தடுக்க தமிழக அரசு தவறி விட்டதாகவும் ராம மோகன் ராவ் சாடினார்.
தலைமைச் செயலகத்தில் நுழைந்த வருமான வரித்துரையினரை தடுக்க தமிழக அரசுக்கு துணிச்சல் இல்லை என்றும் அவர் கூறினார். இதன் மூலம் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை, ராம மோகன் ராவ் மறைமுகமாக தாக்கியுள்ளார். மேலும் தன்னை சஸ்பெண்ட் செய்த உத்தரவை காண்பிக்கவும் மாநில அரசுக்கு கட்ஸ் இல்லை என அவர் கூறினார்.
மாநில அரசு அதிகாரி ஒருவர் முதல்வரை எதிர்த்து இவ்வாறு பேசிய பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் ஆட்சி நிர்வாகத்தில் மேலும் பலரும் இதேபோன்ற ஒழுங்கீனத்தில் இறங்க வாய்ப்பு ஏற்படும். அரசு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடும். எனவே ராமமோகன ராவ் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.