சிறிய நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை – நடிகர் பார்த்திபன்
சென்னை: சிறிய நடிகர்களின் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
தன் குருவுக்கு நன்றிக் காணிக்கையாக அவரது மகன் சாந்தனுவை வைத்து கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தை இயக்கியுள்ளார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இந்தப் படம் நாளை மறுதினம் வெளியாக இருக்கின்றது.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் 'டமுக்காட்லான் டுமுக்காட்டலான்' பாடல், நடிகர் தனுஷ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் பார்த்திபன் நேற்று கலந்துகொண்டார். இந்த கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன்,
பெரிய நடிகர்களின் படங்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் சிறிய நடிகர்களின் படங்களுக்கு அளிக்கப்படுவதில்லை என்று தெரிவித்தார். மேலும் சிறிய தயாரிப்பாளர்களால் வெளிநாட்டு உரிமம் பெறுவதிலும், படத்தை விற்பதிலும் சிக்கல் உள்ளது என்றார்.