தீயா வேலை செய்யனும் குமாரு... கோடை முடியும் வரை 4 மாவட்ட தீயணைப்பு ஊழியர்களுக்கு லீவு இல்லையாம்!
கோடைக்காலம் முடியும் வரை காஞ்சி திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்ட தீயணைப்பு ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர்: கோடைக்காலம் முடியும் வரை காஞ்சி திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்ட தீயணைப்பு ஊழியர்களுக்கு விடுப்பு கிடையாது என உத்தரவிடப்பட்டுள்ளது. கொளுத்தும் வெயிலால் காஞ்சி, திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தீ விபத்துகள் அதிகம் ஏற்பட்டு வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பல இடங்களில் தீ விபத்துகளும் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் வடமேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பணிபுரியும் தீயணைப்புத்துறை ஊழியர்களுக்கு விடுப்பு இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோடை வெயில் வாட்டி வதைக்கிறது
இந்த 4 மாவட்டங்களிலும் 48 தீயணைப்பு நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு, தற்போது கோடை வெயில் வாட்டி வைத்து வருகிறது.
விடுமுறை கிடையாது
கடும் வறட்சியுடன் வனப்பகுதிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் தீ விபத்துகள் நடந்து வருகிறது. இதனால் தீயணைப்பு ஊழியர்கள், நிலைய அலுவலர்களுக்கு கோடைகாலம் முடியும் வரை விடுமுறை கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துகள் நடந்து வருகிறது
இதுகுறித்து வடமேற்கு மண்டல துணை இயக்குனர் மீனாட்சி கூறுகையில், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கோடை வெயில் கொளுத்துவதால் அடிக்கடி மலைப்பகுதிகள், குப்பை கிடங்குகள், குப்பைகள் நிறைந்த பகுதியில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
விடுப்பு எடுக்கக்கூடாது
கோடை காலத்தில் இயற்கையாகவோ, செயற்கையாகவோ, விபத்தாகவோ அடிக்கடி தீ விபத்துக்கள் நடக்கும். எனவே வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து தீயணைப்பு வீரர்கள் கோடைகாலம் முடியும் வரை விடுப்பு எடுக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.