21 வயதுக்கு குறைவானவர்களுக்கு கட்டாயம் சரக்கு கிடையாது... டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி !
சென்னை: டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்க கூடாது. வயது குறித்த சந்தேகம் எழுந்தால் ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அட்டையை வாங்கி வயதை உறுதிசெய்து கொண்டு, மதுபாட்டில் வழங்க வேண்டும் என கடை ஊழியர்களை டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
தமிழகத்தில், அரசு சார்பில் டாஸ்மாக் கடை நடத்தப்படுகிறது. இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள் என பலர் இன்று குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி வரும் நிலைமை உருவாகிக்கொண்டு வருகிறது. டாஸ்மாக் கடைகளை மூடவும், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் நாளுக்கு நாள் குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது. கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி வரும் காலங்களில் டாஸ்மாக் இல்லாத ஊர்களில் குடியிருக்க வேண்டாம் என்று மாறிவிடும் போல் தெரிகிறது. ஏனேனில் காதுகுத்து முதல் அனைத்து விழாக்களுக்கும் சரக்கு பார்ட்டி இல்லாமல் இருப்பதில்லை.
இதனால் இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு விபத்துக்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு குறைவாக உள்ளவர்களுக்கு சரக்கு விற்பனை செய்யக் கூடாது என்று திடீர் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டாஸ்மாக் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘டாஸ்மாக் கடைகளில், 60 நாட்களுக்கு மேல் விற்கப்படாமல் தேங்கி கிடக்கும் மதுபாட்டில்களை குடோனுக்கு திருப்பி அனுப்ப வேண்டும். 21 வயதுக்கும் குறைவாக உள்ளவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் மதுபாட்டில்கள் விற்க கூடாது. வயது குறித்து சந்தேகம் எழுந்தால், அவர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் கார்டு ஆகியவற்றை வாங்கி பார்த்து, 21 வயதை உறுதி செய்துகொண்டு மது பாட்டில் வழங்க வேண்டும்.
வயது குறைவானவர்களுக்கு மதுபாட்டில் விற்கப்படுவது தெரியவந்தால், கடை ஊழியர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும். சிறுவர்களுக்கு மதுபாட்டில் விற்கும் கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது' என்றார்.