மெரினாவில்தான் இடம் வேண்டும் என்பது காந்தி, காமராஜரை அவமதிப்பதற்கு சமமாம்.. அரசு வழக்கறிஞர் வாதம்
Recommended Video
சென்னை: திராவிடத்தின் பெருந்தலைவர் பெரியார் ஆனால் அவருக்கு மெரினாவில் நினைவிடம் இல்லையே என்று தமிழக அரசு சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் தெரிவித்தார்.
வைத்தியநாதன் தனது வாதத்தில் கூறியதாவது: அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கை திமுக தொடர்ந்துள்ளது. மெரினாவில் நினைவிடங்கள் கட்டக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட செயல், இவ்வாறு வைத்தியநாதன் தெரிவிக்கையில் வழக்கை வாபஸ் பெறும் மனுதாரர்களில் ஒருவரான வழக்கறிஞர் துரைசாமி குறிக்கிட்டு வைத்தியநாதன் இவ்வாறு தனது கருத்தை கூற கூடாது என்று எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதன்பிறகு வைத்தியநாதன் வாதத்தை தொடர்கையில், "திராவிடக் கொள்கை கொண்ட தலைவர்கள் மெரினாவில் தான் அடக்கம் செய்ய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திமுக தரப்பு வாதிட்டது. ஆனால் தந்தை பெரியார் திராவிட இயக்கங்களின் மிகப்பெரிய தலைவர். அவர் மெரினாவில் அடக்கம் செய்யப்படவில்லை.
தமிழக முதல்வர் இதற்கு முன்பாக எடுக்கப்பட்ட மரபு நடைமுறைகள் அடிப்படையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளார். கண்ணியமான நல்லடக்கம் என்ற ஒரு வாதத்தை திமுக தரப்பு முன்வைத்துள்ளது. ஆனால் அவர்கள் தங்கள் மனுவில் அது பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இறுதிச் சடங்கு என்பது உயர் பதவியில் உள்ளோருக்கு வேறு வகையான நடைமுறையிலும் உயர்பதவியில் இல்லாதவர்களுக்கு வேறு வகையான நடைமுறைகளிலும்தான் நடைபெறும்.
கருணாநிதியின், கண்ணியமான (decent burial) அடக்கத்துக்காக காந்தி மண்டபத்தில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படுகிறது. காங் தலைவர்கள் சமாதிகள் உள்ள அந்த பகுதியில் அடக்கம் செய்வது கண்ணியமற்றது என்பது காந்தி, காமராஜர், பக்தவசலம் போன்றோரை அவமதிப்பதற்கு சமம். இவ்வாறு அவர் வாதிட்டார். அவர் வாதிடுகையில் அவ்வப்போது திமுக வழக்கறிஞர்கள் குறுக்கிடவே அதற்கு வைத்தியநாதன் தனது ஆட்சேபணையை பதிவு செய்தார்.
முன்னதாக அரசியல் குருவான எம்ஜிஆர் சமாதி அருகே ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட நிலையில், கருணாநிதியின் அரசியல் குருவான அண்ணா சமாதி அருகேதான் கருணாநிதிக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று திமுக தரப்பு வாதிட்டது.
நீதிபதிகள் "மெரினாவில் நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள் வாபஸ் பெற்ற பின் சட்ட சிக்கல் என்ன உள்ளது?" என்று கேள்வி எழுப்பிய நிலையில், அரசு வழக்கறிஞரோ பல்வேறு வாதங்களை எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.