எந்தப் பாலிலும் கலப்படம் இல்லை.. உணவு பாதுகாப்புத்துறை!
எந்தப் பாலிலும் கலப்படம் இல்லை என உணவு பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.
சென்னை: எந்தப் பாலிலும் கலப்படமோ தரக்குறைவோ இல்லை என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. 62 பால் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டதில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.
தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அண்மையில் குற்றம்சாட்டினார். தனியார் பால் பாக்கெட்டுகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் கெமிக்கல் கலக்கப்படுவதாக கூறினார்.
இதனால் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்துள்ள உள்ளதாகவும் குண்டை தூக்கிப் போட்டார். தனியார் பால் மாதிரிகள் புனேவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு
அமைச்சரின் இந்த குற்றச்சாட்டுக்கு தனியார் பால் நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்தன. அமைச்சர் கூறுவதில் உண்மையில்லை என்றும் பாலில் எந்த கலப்படமும் செய்யப்படுவதில்லை என்றனர்.
தூக்கில் தொங்குவேன்
ஆனாலும் தனது குற்றச்சாட்டில் விடாப்படியாக இருந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலப்படம் செய்யப்படுவது நிரூபிக்கப்பட்டவுடன் தனியார் பால் நிறுவனங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் பாலில் கலப்படம் இல்லை என நிரூபிக்கப்பட்டால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் தூக்கில் தொங்குவேன் என்றும் கூறினார்.
தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை
இந்நிலையில் தரப்பரிசோதனை முகாமில் 62 பால் மாதிரிகளை உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் எந்த ஒரு பால் மாதிரியிலும் தரம் குறைவு மற்றும் கலப்படம் இல்லை என தெரியவந்துள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சோப்பு ஆயில்..
அண்மையில் மதுரையில் நடத்தப்பட்ட பால் பரிசோதனை முகாமில் சில தனியார் பால் பாக்கெட்டுகளில் சோப்பு ஆயில் கலக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தரபரிசோதனை முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில் பாலில் கலப்படம் இல்லை என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.