பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்கமாட்டார்கள்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்
பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை: கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் யாரும் சந்திக்க மாட்டார்கள் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.
உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரிப்பதற்காக சசிகலாவுக்கு 5 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த பரோல் காலத்தில் அவர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் சசிகலாவை யாரேனும் அமைச்சர்கள் சந்திப்பார்களா என்ற கேள்வி கடந்த சில நாள்களாக அவர்களையே சுற்றி வந்தது.
ஓ.எஸ்.மணியன் பதில்
சசிகலா பரோலில் வந்தால் சந்திப்பீர்களா என்ற கேள்வி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முன் வைக்கப்பட்டது. அதற்கு வரட்டும், சந்திப்போம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் ஓட்டம்
நேற்றைய தினம் நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றில் சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு சில எம்எல்ஏக்கள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். சிலரோ நாங்கள் சந்திக்கமாட்டோம் என்று கூறினர். அவர் பரோலில் வந்துள்ளதால் எந்தவித அரசியல் மாற்றமும் ஏற்படாது என்று கூறினர்.
அமைச்சர் வெல்லமண்டி
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார். அப்போது அவர் ஜெயலலிதா மரணம் குறித்து பேசினார்.
சசியை சந்திக்க மாட்டோம்
அவர் பேசுகையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஜெயலலிதாவை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையம் அழைத்தால் அமைச்சர்கள் விளக்கமளிப்பர். பரோலில் வந்துள்ள சசிகலாவை அமைச்சர்கள் சந்திக்க மாட்டார்கள் என கூறினார்.