டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம்.. 2 வருட வழக்கை கைவிட்டது சிபிஐ.. விலகாத மர்மம்!
டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர்.
Recommended Video
நாமக்கல்: டிஎஸ்பி விஷ்ணுபிரியா மர்ம மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிடுவதாக கூறியுள்ளனர். வழக்கில் எல்லாவிதமான மேல்நடவடிக்கையையும் கைவிட முடிவு செய்துள்ளதாக சிபிஐ தரப்பு கூறியுள்ளது.
2015ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதியன்று திருச்செங்கோடு காவல்துறையினர் குடியிருப்பில் தனது அறையில் தூக்கில் தொங்கியபடி டிஎஸ்பி விஷ்ணுபிரியா சடலமாக மீட்கப்பட்டார்.அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டது. ஆனால் மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகள் நெருக்கடி காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என அவரது தோழி கீழக்கரை டிஎஸ்பியாக இருந்த மகேஸ்வரி குற்றம்சாட்டியிருந்தார். இதனால் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி தொடர்ந்து வழக்கின் படி விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கடலூரில் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதை தொடர்ந்து பல அதிகாரிகளிடம் விசாரணை நடந்தது. கடந்த இரண்டு வருடமாக இந்த வழக்கில் விசாரணை நடந்தது. ஆனால் இதில் எந்த விதமான முன்னேற்றமும் நடக்கவில்லை.
இந்த நிலையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா மரண வழக்கை சிபிஐ கைவிட்டதாக அறிவித்துள்ளது. 2 வருடமாக விசாரணை நடந்த நிலையில் வழக்கை சிபிஐ கைவிட்டுள்ளது. அவர்கள் அறிக்கையில் வழக்கில் மேல்நடவடிக்கையை கைவிட முடிவு என்றுள்ளார்.
இதுகுறித்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் விஷ்ணுபிரியாவின் தந்தை ரவியிடம் கருத்து கேட்க முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி ரவி ஆஜராகி கருத்து தெரிவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. ரவி இந்த விசாரணையில் ஆஜராவேன் என்று குறிப்பிட்டுள்ளார். சம்மன் வந்து இருப்பதால் ஆஜராவேன் என்றுள்ளார். சிபிஐ அறிக்கையை பார்த்துவிட்டு இதில் முடிவெடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.