அப்பல்லோவில் ஜெயலலிதா.. மத்திய அரசுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் 'உளவு' அவசியமா?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு, டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் வந்தது, ஜெயலலிதாவின் உடல் நலன் குறித்து உளவு பார்க்கத்தான் என்று கூறி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுதர்சன நாச்சியப்பன் நியூஸ்18 சேனல் விவாத நிகழ்ச்சியில் சொன்னாலும் சொன்னார், இப்போது தமிழகத்தில் அது பரபரப்பு விவாதப் பொருளாகியுள்ளது.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க அப்பல்லோவில், டாக்டர் சிவக்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட டாக்டர்கள் குழுவினர் அவருடைய உடல்நிலை குறித்து பல்வேறு பரிசோதனைகளை நேற்றும் மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையிலிருந்து நுரையீரல் சிகிச்சை நிபுணர் டாக்டர் கில்மானி, மயக்கவியல், தீவிர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் டாக்டர் அஞ்சன் டிரிக்கா மற்றும் இதய சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதீஷ் நாயக் ஆகியோர் அடங்கிய மருத்துவ நிபுணர் குழுவினர் அப்பல்லோ வந்து முதல்வருக்கான சிகிச்சையை மேற்பார்வையிட்டனர்.
சுதர்சன நாச்சியப்பன் குற்றச்சாட்டு
இதுகுறித்து சுதர்சன நாச்சியப்பன் கூறுகையில், அப்பல்லோ அழைத்துதான் எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனரா என்பது தெரியவில்லை. ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மோடி அரசு இவர்களை உளவு பார்க்க அனுப்பி வைத்திருக்கலாம். உடல் நிலை மோசமாக இருப்பதை அறிந்து கொண்ட பிறகுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று, மத்திய அரசு, சுப்ரீம் கோர்ட்டில் பல்டியடித்தது என்றார்.
தேவையில்லாத சர்ச்சை
திருமாவளவன் போன்ற பிற கட்சி தலைவர்களும் எய்ம்ஸ் டாக்டர்கள் வருகையை, கேள்விக்குறியாக்க தொடங்கியுள்ளனர். ஆனால், மத்திய அரசுக்கு, எய்ம்ஸ் டாக்டர்களை வைத்து உளவு பார்க்க அவசியம் உள்ளதா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. இது தேவையில்லாத ஒரு சர்ச்சை என்கிறார்கள் மத்திய, மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்து அறிந்த மூத்த பத்திரிகையாளர்கள். சர்வ வல்லமை கொண்ட ஒரு மத்திய அரசால், தனது எல்லைக்குள் உள்ள ஒரு மாநில முதல்வரின் உடல் நலம் பற்றி அறிந்து கொள்ள முடியாமல் இருக்காது என்கிறார்கள் அவர்கள்.
பாஜக கூறுவது இதுதான்
இதுகுறித்து பாஜக மாநில செயலாளர் ராகவன் கூறுகையில், "கல்வியில் உயர்ந்த எய்ம்ஸ் டாக்டர்களை உளவு பார்க்க வந்ததாக கூறுவது கொச்சைப்படுத்தும் செயல். ராகுல் காந்தி, வருகை மனிதாபிமான அடிப்படையிலானது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் சுதர்சன நாச்சியப்பன் கூறிய பிறகுதான், உடல் நிலை சரியில்லாதவரை வைத்தும் அரசியல் செய்யும் மோசமான செயலில் காங்கிரஸ் இறங்கியுள்ளதை புரிந்து கொண்டேன்.
உஷார் நிலையில் உளவுப்பிரிவு
ஒவ்வொரு மாநில அரசின் செயல்பாடு குறித்தும் மத்திய அரசுக்கு தினமும் தகவல் போய்க்கொண்டுதான் இருக்கும். மத்திய உளவு பிரிவினர் மாநிலங்களிலுள்ள தகவல்களை கவர்னருக்கும், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் தினமும், தேவைப்பட்டால் அவ்வப்போதும் அனுப்பியபடியே இருப்பார்கள். அதுதான் நடைமுறையும் கூட.
ஒரு போன் அழைப்பு போதுமே
ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து தகவல் கேட்க வேண்டுமானால், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திலிருந்து, அப்பல்லோவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மேற்கொள்வதே போதுமானது. மாநில முதல்வர் உடல் நிலை குறித்து உண்மையான ரிப்போர்ட்டை அறிந்து கொள்ள அனைத்து உரிமைகளும் மத்திய அரசுக்கு உண்டு. இப்படிப்பட்ட நிலையில் எய்ம்ஸ் டாக்டர்களை அனுப்பி உளவு பார்ப்பதாக கூறுவது அந்த டாக்டர்களின் சேவையை கொச்சைப்படுத்தும் செயல். எந்த ஒரு நோயாளியுமே, செகன்ட் ஒபினீயன் கேட்பது வழக்கம். அதேபோலதான் எய்ம்ஸ் டாக்டர்களிடம் சிகிச்சைக்கு உதவி கேட்டிருப்பார்கள்" என்றார் அவர்.