காவிரி... 18ம் தேதி நல்ல சேதி வரும்.. அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை.. பண்ருட்டி ராமச்சந்திரன்
சென்னை: காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று அதிமுக மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார். 18ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நல்ல உத்தரவு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பண்ருட்டி ராமசந்திரன், ''முதல்வர் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த அவசியமில்லை.
17 மற்றும் 18 ஆம் தேதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே சரியான தீர்வாக இருக்கும் என்றார்.
நிதியமைச்சர் பன்னீர் செல்வத்திடம் முதல்வரின் இலாக்காக்கள் ஒப்படைப்பது தொடர்பான ஆவணத்தில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டு இருக்கிறாரா என்று திமுக தலைவர் கருணாநிதி கேட்டுள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அவர் முதல்வர் ஆகும் வரை அந்தக் கேள்வியை கேட்டுக் கொண்டுதான் இருப்பார் என்று கூறினார்.
எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு வலியுறுத்திய அதே நேரத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் அனைத்துக் கட்சி கூட்டம் தேவையற்றது என்று கூறியுள்ளார்.