ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின்சார இணைப்பு வழங்க தமிழக அரசு மறுப்பு
ஸ்டெர்லைட் ஆலைக்கு தற்காலிக மின்சார இணைப்பு வழங்க தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுரை : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சார்பில் தற்காலிக மின்சார இணைப்பு வேண்டி தொடரப்பட்ட வழக்கில், மின் இணைப்பு கொடுக்க முடியாது என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டி மக்கள் நடத்திய போராட்டம் பெரிய அளவில் வெடித்தது. போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து,மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு ஆலைக்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை சார்பில், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆலையில், ரசாயனப் பொருட்கள், எல்பிஜி, பெட்ரோல், டீசல் ஆகியன உள்ளன.
ரசாயன கிடங்கைப் பராமரிக்க தற்காலிக மின் இணைப்பு கொடுக்க வேண்டும்; இல்லையெனில் மிகப் பெரும் விபத்து ஏற்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து பதில் அளித்த தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர்கள், ஆலைக்கு ஜெனரேட்டர் வசதி செய்து கொடுத்துள்ளதால், மின் இணைப்பு கொடுக்க வேண்டியது இல்லை. இதுகுறித்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து 7 பேர் கொண்ட குழு அறிக்கை அளித்துள்ளது.
அறிக்கையின் அடிப்படையில் ரசாயனப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுள்ளன என்கிற வாதத்தை முன்வைத்தனர். இதனைக் கேட்ட நீதிபதிகள், வழக்கை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.