'ஜிகா வைரஸ்' பற்றி அச்சமடைய வேண்டாம்... அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் ஜிகா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என்று கூறியுள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில், 'ஜிகா வைரஸ்' பரவாமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்
சென்னை: தமிழகத்தில், 'ஜிகா வைரஸ்' பரவாமல் இருக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஜிகா வைரஸ் குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறார்.
நேற்று இது தொடர்பாக சட்டசபையில், கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. அப்போது ஜிகா வைரஸ் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், " சிக்குன் குனியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், ஜிகா வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்களை அரசு திறம்பட கண்காணித்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, மலைக் கிராமத்தில் ஒருவருக்கு, ஜிகா வைரஸ் காய்ச்சல் வந்ததை கண்டறிந்துள்ளோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் யாராவது காய்ச்சல் என்று சிகிச்சைக்கு வந்தால், அது என்ன வகை காய்ச்சல் என கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஜிகா வைரசை பொறுத்தவரை, உயிருக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது. மக்கள் யாரும் அச்சப்பட தேவை இல்லை. எனினும், நோய்கள் பரவாமல் இருக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கேரளா எல்லையில், 12 சுகாதார குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தேவையான மருந்து, மாத்திரைகள் மருத்துவமனைகளில் இருப்பு உள்ளன. கலெக்டர்களுக்கும் உரிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு, தீவிரமாக அனைத்தையும் கண்காணித்து வருகிறது." என்று தெரிவித்தார்.