சென்னைப் பெண் கொடுத்த ரூ 20,000க்கு சில்லறைப் பொட்டலத்தை தலையில் சுமத்திய ரிசர்வ் வங்கி!
திருமணச் செலவிற்காக 20 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களை மாற்ற சென்றவருக்கு 10 ரூபாய் நாணயத்தை பொட்டலம் பொட்டலமாகக் கட்டி ரிசர்வ் வங்கி கொடுத்துள்ளது.
சென்னை: 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கிக்கு சென்ற பெண்ணிடம் 10 ரூபாய் நாணயங்களை பொட்டலம் பொட்டலமாகக் கட்டி கொடுத்து அனுப்பியுள்ளது ரிசர்வ் வங்கி.
கடந்த 10ம் தேதியில் இருந்து பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கி மற்றும் அஞ்சலகங்களில் பொதுமக்கள் கொடுத்து மாற்றி வந்தனர்.
ஒருவர் 2000 வரை மட்டுமே பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியும் என்ற நிலை இருந்தாலும், திருமணத்திற்கான உரிய ஆவணங்களைகாட்டி கூடுதலாக பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
சென்னை சாந்தி
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த சாந்தி என்பவர் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுக்களை எடுத்துக் கொண்டு சென்னை ரிசர்வ் வங்கி கிளைக்கு சென்றுள்ளார். திருமணத்திற்கான அழைப்பிதழை ரிசர்வ் வங்கி ஊழியர்களிடம் காண்பித்து 20 ஆயிரம் ரூபாய்க்கான புதிய ரூபாய் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
ரூ. 20,000 சில்லறை
விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட ரிசர்வ் வங்கி 20 ஆயிரம் ரூபாய் பழைய நோட்டுக்களையும் பெற்றுக் கொண்டது. அதற்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி தரப்போகிறது என்று எதிர்ப்பார்த்திருந்த சாந்திக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. 10 ரூபாய் நாணயங்கள் பொட்டலம் பொட்டலமாக கட்டப்பட்டு சாந்தியிடம் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கொடுத்தனர். அதிர்ச்சியடைந்த சாந்தி, புதிய ரூபாய் நோட்டுக்களாக கொடுக்குமாறு கெஞ்சி கேட்டுள்ளார்.
ஏமாற்றம், கோபம்
எதற்கும் மசியவில்லை ரிசர்வ் வங்கி. மேலும், தங்களிடம் ரூபாய் நோட்டுக்களே இல்லை என்று ரிசர்வ் வங்கி ஊழியர்கள் கூறியுள்ளனர். என்ன செய்வது என்றே தெரியாத சாந்தி நாணயப் பொட்டலங்களை அள்ளிக் கொண்டு, புதிய ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காத ஏமாற்றத்துடன் வீடு திரும்பினார்.
கவலையே படாத ரிசர்வ் வங்கி
ரிசர்வ் வங்கிக்கு 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றச் சென்றால் நாணயங்களாக மட்டுமே தருகிறார்கள் என்று ஏற்கனவே பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக மக்கள் தெரிவிக்கும் அதிருப்தி, எதிர்ப்பு, கோபம், கண்டனம் எதையும் ரிசர்வ் வங்கி கண்டு கொள்வதில்லை. பொதுமக்களும் பழைய நோட்டை மாற்றிக் கொண்டால் சரி என்ற நினைப்பில் வீடு திரும்பிவிடுகின்றனர்.