யார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன்... விசு கொந்தளிப்பு
யார் தடுத்தாலும் ஆர்எஸ்எஸ் மேடைகளில் பேசுவேன் என்று இயக்குநர் விசு ஆவேசமாக தெரிவித்தார். நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கூறினார்.
நாகர்கோவில்: ஆர்எஸ்எஸ் மேடைகளில் யார் தடுத்தாலும் நான் பேசுவேன் என்று இயக்குநரும் நடிகருமான விசு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீதாராம் சுவாமி என்பவர் நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு அதனை நாகர்கோவிலில் முடித்துக்கொண்டார். அதை விழாவாக நடத்திய ஆர் எஸ் எஸ் அமைப்பு கொண்டாடியது. அதில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், திரைப்பட இயக்குநர் விசு, கவிஞர் பிறைசூடன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் , " நாட்டைச் சுற்றி சாலை அமைத்து அதற்கு பாரதமாதா சாலை என்று பெயரிட வேண்டும் " என்று கூறினார்.
பின்னர் பேசிய திரைப்பட இயக்குநர் விசு கூறுகையில், " ஆர்எஸ்எஸ் அமைப்பினர் நடத்தும் இந்த விழாவில், நான் கலந்துகொள்ள கூடாது என்று சிலர் எதிர்ப்புக் காட்டினர். நான் கன்னியாகுமரிக்கு போகிறேன். அங்கு ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என்றதும், ஏன் சார் நீங்க போறீங்க...டிவி பத்திரிகை எல்லாம் பாக்கிறதில்லையா? என்று கேட்டனர்.
ஆர் எஸ் எஸ் அமைப்பினர் பேசுவதை எல்லாம் கவனிப்பதில்லையா என்றும் கேட்டனர் என்னிடம். நான் அவர்களிடம் கூறினேன். எனக்கு 73 வயதாகிறது. இந்த வயதில் எனக்கு முடிவெடுக்க தெரியாதா? கண்டிப்பாக நான் ஆர் எஸ் எஸ் மேடைக்குப் போவேன். பேசுவேன்" என்று தெரிவித்தார்.