இனி மாற்றுத் திறனாளிகள் பெட்டியில் யாரும் பயணிக்க முடியாது
சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரயில் பெட்டிகளில், மற்ற பயணிகளை அனுமதிக்க மாட்டோம் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே ஏற்றுக்கொண்டதை அடுத்து அவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டனர்.
தென்னக ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை திட்டி கொச்சைப்படுத்தும் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையை கண்டித்தும், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் மற்றவர்...பயணம் செய்வதை தடுக்க வலியுறுத்தியும் 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கடந்த இருதினங்களாக சென்னை தென்னக ரயில்வே அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் புதன்கிழமையன்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கையை தென்னக ரயில்வே நிர்வாகம் ஏற்க முன்வந்தது. அதன்படி ரயில்வே துறையில் மாற்றுத்திறனாளி பெட்டிகளுக்கு காவல் பாதுகாப்பு, சிசிடிவி கேமரா, மாற்றுத் திறனாளி பெட்டிகளை ஆக்கிரமிப்போர் மீது சட்ட நடவடிக்கை போன்றவைகள் அமல்படுத்த முடிவு செய்துள்ளதாக உறுதி செய்யப்பட்டதால் மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தனர்.