சிஏஏ.. தமிழகத்தில் யார் பாதிக்கப்பட்டுள்ளார், சொல்லுங்கள்.. சட்டசபையில் ஆவேசமான முதல்வர்!
சென்னை: தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும், குடியுரிமை சட்டத் திருத்தத்தால் பாதிப்பு இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டசபையில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, திமுகவின் சக்கரபாணி பேசுகையில், சிஏஏ தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று கேட்டார். அப்போது குறுக்கிட்டு பேசினார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
முதல்வர் கூறியதாவது: சிஏஏ விவகாரத்தை சொல்லி சொல்லி நாட்டு மக்களை நீங்கள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள். இதனால் யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.. சொல்லுங்கள். நாங்கள் பதில் சொல்கிறோம். தவறான தகவல்களை பரப்புகின்றனர்.
தமிழகத்தில் உள்ள, தமிழக மண்ணில் பிறந்த எந்த சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று சுட்டிக் காட்டுங்கள். நாங்கள் அதற்கு பதில் சொல்கிறோம். அதைவிடுத்து, மக்களை ஏமாற்றி, நாடகமாடி, தவறான தகவலை சொல்லி, நல்ல அமைதியாக வாழக்கூடிய தமிழகத்தில் இன்று, குந்தகம் ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறீர்களே, நீங்களே சொல்லுங்கள், யார் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சொல்லுங்கள் நான் பதில் சொல்கிறேன்.
தவறான கருத்துக்களைக் கூறி நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்..
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 18, 2020
- சட்டப்பேரவையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் எதிர்கட்சிகளுக்கு பதிலடி. #TNAssembly #TNGovt pic.twitter.com/EZRnkkINaw
குடியுரிமை சட்டத் திருத்தம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில அரசு அந்த சட்டத்தை கொண்டுவரவில்லை. தமிழக மண்ணில் பிறந்த யாருக்கும் சிஏஏ சட்டத்தால் பாதிப்பு ஏற்படாது. தமிழக சிறுபான்மையினருக்கும் பாதிப்பு கிடையாது. தமிழக அரசு அதில் உறுதியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாக கர்நாடகா சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர எடியூரப்பா திட்டம்
நேற்று சட்டசபையில் உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வண்ணாரப்பேட்டை கலவரத்தின் பின்னணியில் விஷமிகளின் சதி இருப்பதாக கூறினார். விபத்தில் உயிரிழந்தவர் புகைப்படத்தை பயன்படுத்தி, போலீஸ் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறி, தவறான போட்டோவை பரப்பி கலவரத்தை தூண்டியதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.