தமிழகத்தில் அமைதி, வளம் இல்லை.... மக்களிடம் மலர்ச்சியில்லை - ஸ்டாலின்
தமிழகத்தில் அமைதி இல்லை, வளம் இல்லை, வளர்ச்சியும் இல்லை, மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் இல்லை என்று சட்டசபையில் பேசிய மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை : சட்டசபையில் நேற்று 2017-18ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையின் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அமைதி இல்லை, வளம் இல்லை, வளர்ச்சியும் இல்லை, மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் இல்லை என்று அரசை குற்றம் சாட்டினார்.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் நிறைவு நாளான நேற்று ஸ்டாலின் நீண்ட நேரம் பேசினார். அப்போது அவர், அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கிறீர்கள், அமைதி, வளம், வளர்ச்சி, மக்கள் வாழ்வில் மறுமலர்ச்சி, நல்லாட்சி என்று கூறியுள்ளீர்கள். 'அமைதி', அது இன்று தமிழகத்தில் இருப்பதாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் போராட்டம், மெரினா கடற்கரையை கலவர பூமியாக மாற்றியது இந்த அரசு. அமைதியை காணவில்லை என்றார்.
அடுத்து நெடுவாசல் போராட்டம். விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களுக்கு ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் ஆபத்து என்று தொடர் போராட்டத்தை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை. வறட்சிக்காக தமிழக விவசாயிகள் இங்கே போராடியது போதாது என்று, டெல்லிக்கு சென்று போராடக்கூடிய நிலைமை. பிரிட்ஜோ என்ற மீனவ இளைஞரை இலங்கை ராணுவ துப்பாக்கி சூட்டிற்கு இழந்து மீனவர்கள் ஒருவகையிலே போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
வீதிக்கு வீதி போராட்டம்
உயர் படிப்புக்கு சென்ற மாணவன் முத்துகிருஷ்ணனை இழந்து அவருடைய பெற்றோர்கள் அதிர்ச்சியிலே உறைந்து போய் இருக்கிறார்கள். ஏன், வெளி மாநிலங்களுக்கு தங்கள் வீட்டு பிள்ளைகளை உயர் கல்விக்கு அனுப்பி வைப்பதற்கு வீதியிலே இன்றைக்கு அந்த பெற்றோர்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள். குடிநீர் கேட்டு, பாமாயிலும், பருப்பும் ரேஷன் கடைகளில் கேட்டு தாய்மார்கள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, தேர்தல் அறிக்கையில் நீங்கள் சொன்ன அந்த அமைதியை இன்றைக்கு மக்கள் இழந்து போயிருக்கிறார்கள்.
தமிழர்களின் தலையில் கடன்
அடுத்து வளம், வளர்ச்சி. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகன் தலைமையிலும், ரூ.35,000க்கும் மேலாக கடன் சுமத்தப்பட்டிருக்கிறது. பயிர்க்கடனை திரும்ப செலுத்த முடியாமல் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதுவரை தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். கரும்பு விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை கிடைக்காமல் வாடிக் கொண்டு இருக்கிறார்கள். பால் விவசாயிகள் தங்களுடைய பாலுக்கு உரிய விலை கிடைக்காமல் பரிதாபத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கிறார்கள்.
தொடரும் தற்கொலை
போக்குவரத்து கழகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர்கள் தங்களுடைய ஓய்வூதியம் கூட கிடைக்காமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள். மக்கள் நலப் பணியாளர்கள் தங்களுக்கு இன்னும் வேலை கிடைக்காமல் ஒவ்வொருவராக தற்கொலை செய்துகொண்டு மாண்டுகொண்டிருக்கும் கொடுமை தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது.
எங்கே நல்லாட்சி
இன்னொரு முக்கியமான வாக்குறுதி ‘நல்லாட்சி'. அது எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கக்கூடிய நிலையிலே இருக்கிறது. தமிழக அரசின் சுய மரியாதை இந்த தலைமை செயலகத்தில்தான் இருக்கிறது. அந்த தலைமை செயலகத்திலேயே வருமான வரித்துறை ரெய்டு நடந்திருக்கிறது. அதுவும் முதலமைச்சரின் அறைக்கு அருகிலேயே அந்த ரெய்டு நடந்திருக்கிறது.
மலர்ச்சியில்லை
அரசின் தலைமைச் செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையும் இந்த ஆட்சியில்தான் நடந்திருக்கின்றது. இந்த ஆட்சியில்தான் இன்னொரு தலைமைச் செயலாளர் வீட்டிலும் ரெய்டு நடந்திருக்கிறது. இதைவிட கொடுமை தமிழக டி.ஜி.பி ஆக இருந்தவரை நள்ளிரவில் பதவியிலிருந்து நீக்கியதும் இந்த ஆட்சியில்தான். ஆக தமிழகத்தில் அமைதி இல்லை, வளம் இல்லை, வளர்ச்சியும் இல்லை, மக்கள் வாழ்வில் மலர்ச்சியும் இல்லை.
வாட் வரி உயர்வு
நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதிலேயே ஒரு முரண்பாடு. அதாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி உயர்த்தப்பட்டது. இதுவரை மத்திய அரசுதான் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்தி அறிவித்தார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசு அறிவித்திருக்கும் கொடுமை அரங்கேறியிருக்கின்றது.
நிதிப்பற்றாக்குறை
2016-2017 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் 2 லட்சத்து 52 ஆயிரத்து 431 கோடி ரூபாய் கடன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 2017-2018 நிதிநிலை அறிக்கையில் 3 லட்சத்து 14 ஆயிரத்து 360 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு இருக்கின்றது. இதேபோல் 2016-2017 வருவாய் பற்றாக்குறை ரூ.9 ஆயிரத்து 154 கோடி, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.15 ஆயிரத்து 930 கோடி. 2016-2017 நிதிநிலை அறிக்கையில் நிதி பற்றாக்குறை ரூ.40 ஆயிரத்து 533 கோடி, இந்த நிதிநிலை அறிக்கையில் ரூ.41 ஆயிரத்து 977 கோடி.
அரசு ஸ்தம்பித்தது
சென்ற முறை நிதிப்பற்றாக்குறை 2.96 சதவீதம், இந்த முறை நிதிப்பற்றாக்குறை 4.58 சதவீதம். சென்ற முறை கடனின் சதவீதம் 18.43 சதவீதம், இந்த முறை 20.90 சதவீதம். இந்த வேற்றுமையை தவிர வேறெதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் பெரிதாக இல்லை. நிதிநிலைமை மோசமானால் நிதி நிர்வாகம் படுமோசமாகும், நிதி நிர்வாகம் மோசமானால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நிற்கும். இதுதான் தமிழக அரசில் இன்று நடந்து கொண்டிருக்கிறது என்றார் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் ஸ்டாலின்.