போலீஸ் பாதுகாப்புக்கு நடுவே புகுந்து ரூ.5.75 கோடி கொள்ளை .. ரயில் கொள்ளை பற்றி பகீர் தகவல்
சென்னை: சேலத்தில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான 23 டன் எடை கொண்ட பழைய ரூபாய் நோட்டுகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்காக தனியாக ஒரு பெட்டி ரிசர்வ் செய்யப்பட்டிருந்தது. இப்படி பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த மொத்த பணத்தின் மதிப்பு ரூ.342 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
ஓடும், ரயிலில் இவ்வளவு அதிக மதிப்புக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும்கூட, அதுபற்றி போலீசாரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து உரிய பாதுகாப்பை பெறவில்லை என்று தகவல் வெளியானது ஆனால் இதை ரயில்வே ஐ.ஜி மறுத்துள்ளார். போலீஸ் பாதுகாப்புக்கு நடுவேயே கொள்ளை போயுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டு புது ரூபாய் நோட்டுகளை வழங்குவது வழக்கம். இப்படி, சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகள்தான் ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ரூ.342 கோடி பணத்தை ரயிலில் கொண்டுவருவது குறித்து எப்படியோ கொள்ளையர்களுக்கு தகவல் போயுள்ளது. இந்த பணத்தை பரிமாற்றம் செய்தவர்கள் மூலமாகவே இந்த தகவல் போயிருக்கும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனவேதான், துணிகரமாக, சினிமா பாணியில் ரயிலின் மேற்கூரையில் ஓட்டை போட்டு பண பெட்டிகளை உடைத்து பல கோடி ரூபாயை கொள்ளையர்கள் அபேஸ் செய்துள்ளனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு பற்றி மாலையில் தகவல் வந்தது.அதன் மதிப்பு ரூ.5.75 கோடி.
இதனிடையே, ரயிலில் இவ்வளவு அதிக மதிப்புக்கு பணம் பரிமாற்றம் செய்யப்பட்டாலும்கூட, அதுபற்றி போலீசாரிடம் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்து உரிய பாதுகாப்பை பெறவில்லை என்று தகவல் வெளியானது. அதை ரயில்வே ஐ.ஜி.ராமசுப்பிரமணியம் மறுத்தார்.
ஒரு டிஎஸ்பி, ஒரு இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் காவலுக்கு இருந்ததாகவும், ஆனால் மேற்கூரையை பிரித்து கொள்ளை நடந்துள்ளதால் தங்களுக்கு அதுபற்றி தெரியவில்லை என அவர்கள் விளக்கம் அளித்துள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் ஐ.ஜி. தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கருணாநிதி இதுபற்றி கூறுகையில், இவ்வளவு அதிக பணத்தை இடமாற்றம் செய்யும்போது அது ரகசியமாக வைத்திருக்கப்பட வேண்டும். கொள்ளையர்களுக்கு தகவல் கசிந்திருப்பதில் இருந்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தரப்பில் ஓட்டை இருப்பது புரிகிறது.
இதுபோன்ற சூழ்நிலையில், பாதுகாப்பு தேவை என அதிகாரிகள் கோரிக்கைவிடுத்திருந்தார், ஆயுதம் தாங்கிய 2 போலீசாரையாவது காவல்துறை அனுப்பி வைத்திருக்கும்.
ஒருவேளை காவல்துறை, தங்களால் பாதுகாப்பு வழங்க முடியாத சூழ்நிலை இருப்பதாக தெரிவித்தால், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் பண பரிமாற்றத்தை ஒத்திபோட்டிருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.