என்ன ஆச்சு? ஏன் நம்ம கூட யாருமே கூட்டணிக்கு வரலை? கூடிக் கலைந்த காங். தலைகள்!
சென்னை: கூட்டணியே வேண்டாம் என்று முடிவெடுத்து தனியாக தேர்தல் சுற்றுப்பயணம் கிளம்பிவிட்டார் அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா.
கூட்டணிப் பேச்சுவார்த்தை என்ற பெயரில் பாஜக கட்சி அலுவலகத்திற்கு பாமக, தேமுதிகவைச் சேர்ந்த கட்சித்தலைவர்கள் வந்து போய்க்கொண்டிருக்கின்றனர். அதனால் ஊடகத்துறையினர் கேமரா சகிதமாக அங்கே ஸ்டேண்ட் போட்டு விட்டனர்.
நம்பியிருந்த திமுகவும் 35 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த கையோடு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு தேர்தல் சுற்றுபயண தேதியையும் அறிவித்து விட்டது.
கம்யூனிஸ்ட்களே காலை வாரிவிட்ட அதிமுகவை நினைத்து அடிக்கடி கூடிப் பேசி கலைகின்றனர். கடைசியில் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவித்து விட்டனர்.
மிச்சமிருப்பது காங்கிரஸ் கட்சியினர்தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் அதிமுக, திமுக தோளில் சவாரி செய்து தொகுதிகளை வென்று வந்தது. இப்போது கூட்டணி பற்றி பேச யாரும் சத்திய மூர்த்தி பவன் பக்கம் கூட எட்டிப்பார்க்க வில்லை. இதனால் தொண்டர்கள் கூட அலுவலகத்தின் பக்கம் வர மறுக்கின்றனராம். அங்கே என்னதான் நடக்கிறது? கொஞ்சம் எட்டிப்பார்த்த போது நடந்த சுவரஸ்யங்கள்.
கூட்டணி பேசுவோம்
நம்ம கூட யாருமே கூட்டணிக்கு வராட்டி என்ன நாமாளே கூட்டணி போட்டு பேசுவோம் என்று தலைவர் ஞானதேசிகன் தலைமையில் ஈவிகேஎஸ். இளங்கோவன், தங்கபாலு, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் பேச ஆரம்பிக்கின்றனர்.
நான் சரியாத்தான் சொல்றேனா?
என்ன ஆச்சு? ஏன் நம்ம கூட யாருமே கூட்டணி வைக்கல? என்று கேட்கிறார் தலைவர் ஞானதேசிகன். மறுபடியும் முதல்ல இருந்தா? என்கிற ரீதியில் யோசிக்கிறார் ஜி.கே.வாசன்.
இணக்கமானவர்களுடன் கூட்டணி
ஒத்த கட்சிகளுடன் கூட்டணி என்று வாசன் பேச ஆரம்பிக்கவே... அதான் யாருமே ஒத்து வரலேயே என்று ஆரம்பிக்கிறார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அப்ப இணக்கமானவர்களுடன் கூட்டணி வைக்கலாம் என்கிறார் ப.சி.
எனக்கு சேலம் வேணும்
நீங்க கூட்டணி வைங்க வைக்காம போங்க... தொகுதி முடிவு பண்ணுங்க பண்ணாம போங்க.... எனக்கு சேலம் உறுதியா வேணும் ஆ.... என்று தன் பங்குக்கு தங்கபாலு பேசவே அதிர்ச்சியாகின்றனர் தலைவர்கள்.
அந்த அமைச்சர் பதவி....
யார் கூடயாவது கூட்டணி வைச்சு ஜெயிச்சா இந்தமுறையும் மந்திரியாகிடலாம்னு நெனைச்சேன். அதுல மண்ணு விழுந்துருச்சே என்று ஜெயந்தி நடராஜன் பேசவே, அங்கே கூடவே இருந்த காயத்ரி தேவியும் அதை ஆமோதிக்கிறார்.
இளசுகளின் கூட்டணி
மூத்த தலைவர்கள்தான் கூட்டணி பேசனுமா? நாங்களும் பேசுவோம் என்று யுவராஜ், கார்த்தி சிதம்பரம், மயூரா ஜெயக்குமார், கராத்தே தியாகராஜன் தனிக்கூட்டம் போடுகின்றனர். அவங்க ரிட்டையர் ஆகிட்டு நமக்கு வழி விடுவாங்கண்ணு பார்த்தா கடைசியில மொதலுக்கே மோசாமால்ல இருக்கு என்று ஆரம்பிக்கிறார் கார்த்தி.
யாராவது வர்றாங்களா?
இப்படி மாத்தி மாத்தி பேசுறதை விட்டுட்டு சத்தியமூர்த்தி பவன் பக்கம் யாராவது வர்றாங்களான்னு பாக்கலாம்ல என்று மகனுக்கு சிதம்பரம் ஆர்டர் போடவே, அடப் போங்கப்பா. இப்போ எந்த கட்சித்தலைவரும் மவுண்ட் ரோடு பக்கம் கூட வர்றதில்லை. கம்யூனிஸ்ட்டுகள்தான் ஃப்ரியா இருக்காங்களாம் வேணும்னா பேசலாம் என்று கேட்கவே கடுப்பாகிறார் ப.சி.
டீ பாய்ஸ் கூட காணோமே
போன வாரம் விருப்பமனு வாங்குறப்ப கூட கூட்டம் ஜெ... ஜெ...ன்னு இருந்துச்சே... நல்லா யாவாரம் ஆச்சு டீ, கடலை பொறி காரங்க சொன்னாங்க. இப்போ அவங்களைக் கூட காணோமே என்று ஏக்கத்தோடு பேசி கலைகின்றனர் கூட்டணி கட்சி.... ஸாரி காங்கிரசின் கும்மாங்குத்து கோஷ்டி தலைவர்கள்.