திமுகவினர் மீதான சஸ்பென்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது: சபாநாயகர் தனபால்
சென்னை: திமுக எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்ய முடியாது என்று சபாநாயகர் தனபால் கூறியுள்ளார். உத்தரவை மறுபரிசிலனை செய்யுமாறு காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீக் லீக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையை அவர் நிராகரித்தார்.
நேற்றைய சட்டசபை விவாதத்தின் போது தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் 80 திமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இன்று அனைத்து எம்.எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்தனர். ஆனால் அவர்களை சபை வளாகத்திற்குள் செல்ல காவலர்கள் அனுமதி மறுத்து கதவை மூடினர்.
சிறிது நேரம் கழித்து ஸ்டாலின், துரைமுருகன், ஏ.வ. வேலு ஆகியோரும் சட்டசபை வளாகத்திற்குள் வந்தனர். இவர்களுக்கும் செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டது. தனது அறைக்காவது செல்ல அனுமதியுங்கள் என ஸ்டாலின் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் சபைக்காவலர்கள் அனுமதி மறுத்து விட்டனர். இதனையடுத்து ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் சட்டசபை வளாகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே திமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு காங்கிரஸ், இந்தியா யூனியன் முஸ்லீம் லீக், சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக எம்.எல்.ஏக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர். உறுப்பினர்களின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஒரு வார காலமாக திமுக உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். ஒருமையில் பேசினர். எனவேதான் அவர்களை வெளியேற்றியதாகவும், ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டதாகவும் அவர் கூறினார்.
திமுக உறுப்பினர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை திரும்ப பெற இயலாது என்றும் சபாநாயகர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் இருந்த திமுக கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அமளியை தொடர்ந்து திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினர் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர்.